அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி அர்ஜென்டினா அணியிடம் இந்தியா போராடி தோல்வி


அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி அர்ஜென்டினா அணியிடம் இந்தியா போராடி தோல்வி
x
தினத்தந்தி 3 March 2018 9:30 PM GMT (Updated: 3 March 2018 8:41 PM GMT)

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் போராடி தோல்வி கண்டது.

இபோக்,

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் போராடி தோல்வி கண்டது.

அஸ்லான் ஷா ஆக்கி


27-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நேற்று தொடங்கியது. 10-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

முதல் நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அணியான அர்ஜென்டினா, உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய அணியை எதிர்கொண்டது.

கோன்ஸாலோ அபாரம்


இந்திய அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை கடைப்பிடித்தது. முதல் 10 நிமிடங்களில் இந்திய அணியின் முன்கள வீரர்கள் தல்விந்தர்சிங், சுமித் குமார் ஆகியோர் எதிரணியின் கோல் எல்லையை முற்றுகையிட்டு கோல் அடிக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அர்ஜென்டினா அணியின் பின்கள வீரர்கள் அந்த முயற்சிகளை முறியடித்தனர்.

13-வது மற்றும் 24-வது நிமிடங்களில் அர்ஜென்டினா அணி அடுத்தடுத்து கோல் அடித்தது. அந்த அணி வீரர் கோன்ஸாலோ பெய்லாட் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

சமநிலை

இந்த முன்னிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இந்திய அணி 26-வது மற்றும் 31-வது நிமிடங்களில் பதில் கோல் திருப்பியது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அமித் ரோஹிதாஸ் இந்த கோல்களை அடித்தார். இதனால் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது.

34-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி 3-வது கோலை அடித்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோன்ஸாலோ பெய்லாட் இந்த கோலை திணித்தார். அவர் அடித்த ‘ஹாட்ரிக்’ கோல் இதுவாகும். 4-வது கால்பகுதி ஆட்டத்தில் பலத்த மழை கொட்டியதால் சுமார் 1 மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டு மீண்டும் தொடர்ந்தது. அதன் பிறகு இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

அர்ஜென்டினா அணி வெற்றி

முடிவில் அர்ஜென்டினா அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை போராடி வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கியது. இந்த ஆட்டத்தில் 5 கோல்களும் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அடிக்கப்பட்டன. கடைசி 5 நிமிட ஆட்டம் இருக்கையில் இந்திய அணி வீரர் சுமித் முரட்டு ஆட்டம் காரணமாக மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் இந்திய அணி 10 வீரர்களுடன் ஆடும் சூழ்நிலை ஏற்பட்டது.

மற்றொரு ஆட்டத்தில் உலக சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான ஆஸ்திரேலியா அணி 4-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை சாய்த்தது. இன்னொரு ஆட்டத்தில் மலேசிய அணி 4-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை தோற்கடித்தது.

இன்றைய ஆட்டங்கள்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் ஆட்டங்களில் இந்தியா-இங்கிலாந்து (பகல் 1.30 மணி), அயர்லாந்து-அர்ஜென்டினா (பிற்பகல் 3.30 மணி), மலேசியா-ஆஸ்திரேலியா (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-1 சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Next Story