‘ஆசிய விளையாட்டு போட்டியில் மெத்தனமாக செயல்படமாட்டோம்’ இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளர் பேட்டி


‘ஆசிய விளையாட்டு போட்டியில் மெத்தனமாக செயல்படமாட்டோம்’ இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளர் பேட்டி
x
தினத்தந்தி 17 July 2018 11:00 PM GMT (Updated: 17 July 2018 8:49 PM GMT)

‘ஆசிய விளையாட்டு போட்டியில் மெத்தனமாக செயல்படமாட்டோம்’ என்று இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் தெரிவித்தா

புதுடெல்லி, 

‘ஆசிய விளையாட்டு போட்டியில் மெத்தனமாக செயல்படமாட்டோம்’ என்று இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் தெரிவித்தார்.

ஆசிய விளையாட்டு போட்டி

18–வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18–ந் தேதி தொடங்குகிறது. இதன் ஆண்கள் ஆக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்த பிரிவில் ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்திய அணி தொடக்க லீக் ஆட்டத்தில் ஹாங்காங்கையும் (ஆகஸ்டு 22–ந் தேதி), 2–வது லீக் ஆட்டத்தில் ஜப்பானையும் (24–ந் தேதி), 3–வது ஆட்டத்தில் தென்கொரியாவையும் (26–ந் தேதி), கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையையும் (28–ந் தேதி) சந்திக்கிறது.

பயிற்சியாளர் கருத்து

ஆசிய விளையாட்டு போட்டி குறித்து இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:–

நாங்கள் நடப்பு சாம்பியன் அணியாக இருந்தாலும் எந்தவொரு அணியையும் எளிதாக எடுத்து கொள்ளமாட்டோம். நாங்கள் எளிதான பிரிவில் இடம் பெற்று இருக்கிறோம் என்று நான் சொல்லமாட்டேன். எல்லா அணிகளுக்கு எதிராகவும் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவோம். ஹாங்காங், இலங்கை அணிகளுக்கு எதிராக நாங்கள் விளையாடியது கிடையாது.

ஆசிய கண்டத்தில் ஜப்பான் வளர்ந்து வரும் அணியாகும். எந்தவொரு அணிக்கும் ஆச்சரியம் அளிக்கும் திறமை அந்த அணிக்கு உண்டு. சமீபத்தில் நடந்த போட்டிகளில் ஜப்பான் அணி சிறப்பாக செயல்பட்டது. தென்கொரியாவும் நல்ல அணியாகும். அந்த அணி தடுப்பு ஆட்டத்தில் சிறந்து விளங்கக்கூடியதாகும். ஆசிய விளையாட்டு போட்டியில் மீண்டும் தங்கப்பதக்கம் வென்று 2020–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற வேண்டும் என்பதில் அணியினர் ஆர்வமாக இருக்கின்றனர். போட்டியில் ஒருபோதும் மெத்தனத்துக்கு இடம் கொடுக்கமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தரவரிசையில் இந்தியா முன்னேற்றம்

இந்த நிலையில் சர்வதேச ஆக்கி சம்மேளனம், உலக அணிகளின் தரவரிசைப்பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில் இந்திய அணி (1,484 புள்ளிகள்) 6–வது இடத்தில் இருந்து ஒரு இடம் ஏற்றம் கண்டு 5–வது இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் 2–வது இடம் பிடித்ததன் மூலம் இந்திய அணி தரவரிசையில் முன்னேறி இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி (1,906 புள்ளிகள்) முதலிடத்திலும், அர்ஜென்டினா அணி (1,883 புள்ளிகள்) 2–வது இடத்திலும், பெல்ஜியம் அணி (1,709 புள்ளிகள்) 3–வது இடத்திலும், நெதர்லாந்து அணி (1,654 புள்ளிகள்) 4–வது இடத்திலும் நீடிக்கின்றன. ஜெர்மனி அணி (1,456 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 6–வது இடத்தை பெற்றுள்ளது.


Next Story