பெண்கள் உலக கோப்பை ஹாக்கி: இத்தாலியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இந்தியா


பெண்கள் உலக கோப்பை  ஹாக்கி: இத்தாலியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இந்தியா
x
தினத்தந்தி 1 Aug 2018 3:45 AM GMT (Updated: 1 Aug 2018 3:45 AM GMT)

பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடரில், இத்தாலியை வீழ்த்தி காலிறுதிக்குள் இந்திய அணி நுழைந்தது.

லண்டன்,

16 அணிகள் இடையிலான 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் தங்கள் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். 

2-வது மற்றும் 3-வது இடம் பிடிக்கும் அணிகள் மற்ற பிரிவில் உள்ள அணியுடன் ‘பிளே-ஆப்’ (நாக்-அவுட்) சுற்று ஆட்டத்தில் விளையாட வேண்டும். இதில் வெற்றி பெறும் அணி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைக்கும்.

இந்த போட்டி தொடரில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி, இத்தாலியை எதிர்கொண்டது.  இந்த போட்டியில் அபார ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தியது. பெனால்டி கார்னர் மூலம் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட இந்திய வீராங்கனைகள், மூன்று கோல்கள் அடித்தனர். 

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதியில், இந்திய அணி 3-0 என்ற  கணக்கில் வென்றது. இந்த வெற்றியின் மூலம், வரும் வியாழக்கிழமை நடைபெறும் போட்டியில் அயர்லாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது கவனிக்கத்தக்கது. 


Next Story