ஆண்கள் ஆக்கி: கடைசி லீக்கில் 20 கோல்கள் போட்டு இலங்கையை ஊதித்தள்ளியது இந்தியா


ஆண்கள் ஆக்கி: கடைசி லீக்கில் 20 கோல்கள் போட்டு இலங்கையை ஊதித்தள்ளியது இந்தியா
x
தினத்தந்தி 28 Aug 2018 9:00 PM GMT (Updated: 28 Aug 2018 7:43 PM GMT)

ஆசிய விளையாட்டு ஆண்கள் ஆக்கியில் ‘ஏ’ பிரிவில் அங்கம் வகித்த நடப்பு சாம்பியன் இந்திய அணி நேற்று இலங்கையை 20–0 என்ற கோல் கணக்கில் ஊதித்தள்ளியது.

ஜகர்தா, 

ஆசிய விளையாட்டு ஆண்கள் ஆக்கியில் ‘ஏ’ பிரிவில் அங்கம் வகித்த நடப்பு சாம்பியன் இந்திய அணி நேற்று தனது கடைசி லீக்கில் கத்துக்குட்டி அணியான இலங்கையை 20–0 என்ற கோல் கணக்கில் ஊதித்தள்ளியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஆகாஷ்தீப்சிங் 6 கோல்களும், ருபிந்தர்பால் சிங், ஹர்மன்பிரீத்சிங், மன்தீப்சிங் தலா 3 கோல்களும் அடித்தனர்.

லீக்கில் விளையாடிய 5 ஆட்டங்களிலும் வெற்றிகளை குவித்த இந்திய அணி மொத்தம் 76 கோல்கள் போட்டு வெறும் 3 கோல் மட்டுமே விட்டுக்கொடுத்திருக்கிறது. இந்திய அணி நாளை நடக்கும் அரைஇறுதியில் மலேசியாவை எதிர்கொள்கிறது.

இந்திய பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கூறுகையில், ‘தொடக்க லீக்கில் இந்தோனேஷியாவுக்கு எதிராக 17–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றோம். கடைசி லீக்கை 20–0 என்ற கணக்கில் முடித்திருக்கிறோம். மலேசியா, மிகவும் கடினமான அணி. அவர்களுக்கு எதிராக நாங்கள் பலமுறை விளையாடி இருக்கிறோம். அரைஇறுதி என்பது நாக்–அவுட் போட்டியாகும். இதில் தோற்றால் அவ்வளவு தான். இன்னொரு வாய்ப்பு கிடைக்காது. அதை எங்களது வீரர்கள் நன்கு அறிவர். மலேசியாவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்’என்றார்.

இந்தியாவைப் போல் ‘பி’ பிரிவில் தோல்வியே சந்திக்காமல் 5 லீக்கிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த பாகிஸ்தான் அணி இன்னொரு அரைஇறுதியில் ஜப்பானை சந்திக்கிறது.


Next Story