10 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய ஆக்கி போட்டி - சென்னையில் நாளை தொடக்கம்


10 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய ஆக்கி போட்டி - சென்னையில் நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 4 Sep 2018 10:45 PM GMT (Updated: 4 Sep 2018 7:30 PM GMT)

10 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய ஆக்கி போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.

சென்னை,

92-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (6-ந் தேதி) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஓ.என்.ஜி.சி., இந்தியன் ரெயில்வே, இந்திய ராணுவம், மத்திய செயலகம், மும்பை ஆக்கி சங்கம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் பெங்களூரு ஆக்கி சங்கம், இந்தியன் ஆயில், பஞ்சாப் சிந்து வங்கி, இந்திய கடற்படை, சென்னை ஆக்கி சங்கம் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். தினசரி போட்டி மாலை 4.15 மணிக்கு தொடங்கி மின்னொளியில் நடைபெறும்.

இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.5 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.2½ லட்சமும் ரொக்கப்பரிசாக வழங்கப்படும். இது தவிர ஆட்டநாயகன் மற்றும் சிறந்த வீரர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் உயர்தரமான சைக்கிள் பரிசாக வழங்கப்படும். வழக்கமாக இந்த போட்டியில் இந்திய ஆக்கி அணியின் முன்னணி வீரர்கள் பங்கேற்பது உண்டு. ஆனால் இந்த முறை உலக கோப்பை போட்டிக்கான பயிற்சி முகாம் நடைபெறுவதால் இந்திய அணி வீரர்கள் யாரும் ஆடவில்லை.

தொடக்க நாளான நாளை நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை ஆக்கி சங்கம்-இந்திய கடற்படை (மாலை 4.15 மணி), இந்தியன் ரெயில்வே-மும்பை ஆக்கி சங்கம் (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.

இந்த தகவலை எம்.சி.சி. தலைவர் தனஞ் ஜெயதாஸ், அமைப்பு செயலாளர் சண்முகம், முருகப்பா குழும நிர்வாகி அருண் முருகப்பன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தனர்.

Next Story