ஜூனியர் ஆக்கி: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி


ஜூனியர் ஆக்கி: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 10 Oct 2018 10:00 PM GMT (Updated: 10 Oct 2018 9:46 PM GMT)

ஜூனியர் ஆக்கி போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது

ஜோஹர் பாரு,

6 அணிகள் இடையிலான 8-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து 4 கோல்கள் அடித்து 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பிறகு இந்திய அணியின் தடுப்பு ஆட்டத்தில் ஏற்பட்ட தொய்வை சரியாக பயன்படுத்தி சரிவில் இருந்து மீண்ட ஆஸ்திரேலிய அணி கடைசி நேரத்தில் கடும் நெருக்கடி அளித்தது. முடிவில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடர்ந்து 4-வது வெற்றியை பதிவு செய்தது.

இந்திய அணி தரப்பில் குர்சாஹிப்ஜித் சிங், ஹஸ்பிரீத்சிங், கேப்டன் மன்தீப் மோர், விஷ்ணுகாந்த் சிங், ஷிலானந்த் லக்ரா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முந்தைய லீக் ஆட்டங்களில் இந்திய அணி, மலேசியா, நியூசிலாந்து, ஜப்பான் அணிகளை வென்று இருந்தது. நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

Next Story