உலக கோப்பை ஆக்கி: இந்திய அணிக்கு மன்பிரீத் சிங் கேப்டன்


உலக கோப்பை ஆக்கி: இந்திய அணிக்கு மன்பிரீத் சிங் கேப்டன்
x
தினத்தந்தி 8 Nov 2018 10:15 PM GMT (Updated: 8 Nov 2018 8:37 PM GMT)

உலக கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

உலக கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக கோப்பை ஆக்கி

14–வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் வருகிற 28–ந் தேதி முதல் டிசம்பர் 16–ந் தேதி வரை நடக்கிறது.

இதில் கலந்து கொள்ளும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். 2–வது மற்றும் 3 இடத்தை பிடிக்கும் அணிகள் மற்ற பிரிவில் 2–வது அல்லது 3–வது இடம் பிடித்த அணியுடன் ஒரு ஆட்டத்தில் மோதும். இதில் வெற்றி பெறும் அணிகள் கால்இறுதிக்குள் நுழையும்.

மன்பிரீத் சிங் கேப்டன்

‘ஏ’ பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா அணிகளும், ‘சி’ பிரிவில் உலக தரவரிசையில் 3–வது இடத்தில் உள்ள பெல்ஜியம், இந்தியா, கனடா, தென்ஆப்பிரிக்கா அணிகளும், ‘டி’ பிரிவில் உலக தரவரிசையில் 4–வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, பாகிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன. இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை (28–ந் தேதி) எதிர்கொள்கிறது.

உலக கோப்பை போட்டிக்கான இந்திய ஆக்கி அணி பயிற்சி முகாம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இந்த பயிற்சி முகாமில் 34 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் இருந்து 18 பேர் கொண்ட இந்திய ஆக்கி அணியை, ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது. அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இருந்து விலகிய சுனில், சீனியர் வீரர் ரூபிந்தர் பால்சிங் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்திய அணி வீரர்கள்

உலக கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் வருமாறு:–

கோல் கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ், கிருஷ்ணன் பகதூர் பதாக், பின்களம்: ஹர்மன்பிரீத் சிங், பிரேந்திர லக்ரா, வருண்குமார், கோதாஜித் சிங், சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், நடுகளம்: மன்பிரீத் சிங் (கேப்டன்), சிங்லென்சனா சிங் (துணை கேப்டன்), நீலகண்ட ‌ஷர்மா, ஹர்திக் சிங், சுமித், முன்களம்: ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங், தில்பிரீத் சிங், லலித்குமார் உபாத்யாய், சிம்ரன்ஜீத் சிங்.

அணி வீரர்கள் தேர்வு குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கருத்து தெரிவிக்கையில், ‘உலக கோப்பை போட்டிக்கு சரியான கலவையிலான சிறந்த அணியை தேர்வு செய்துள்ளோம். அணி தேர்வில் சில கடினமாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 18 பேர் கொண்ட இறுதி அணியில் அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். நடப்பு பார்ம் மற்றும் உடல் தகுதியின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் தொடர்ந்து தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். உலக கோப்பை போட்டியிலும் நமது அணி சிறப்பாக செயல்படும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story