உலககோப்பை ஆக்கி: ‘வெற்றியுடன் தொடங்க விரும்புகிறோம்’ - இந்திய அணி பயிற்சியாளர் ஹரேந்திர சிங்


உலககோப்பை ஆக்கி: ‘வெற்றியுடன் தொடங்க விரும்புகிறோம்’ - இந்திய அணி பயிற்சியாளர் ஹரேந்திர சிங்
x
தினத்தந்தி 27 Nov 2018 11:15 PM GMT (Updated: 27 Nov 2018 7:47 PM GMT)

உலககோப்பை ஆக்கியின் முதல் ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்க விரும்புவதாக, இந்திய அணி பயிற்சியாளர் ஹரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதையொட்டி நேற்று பேட்டி அளித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங்கிடம், ‘ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடிய 7 இளம் வீரர்கள் இந்த போட்டியில் இடம் பெற்று இருப்பது குறித்து’ கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

இந்தியாவை இளம் அணி என்று சொல்ல முடியாது. இந்த அணியால் வெற்றி பெற்று வரலாறு படைக்க முடியும். நீங்கள் பொறுத்து இருந்து பாருங்கள். இளம் வீரர்கள் இந்திய சீனியர் அணியின் சீருடையை அணிய போதிய தகுதி படைத்தவர்கள் என்று தேர்வாளர்கள் கருத்தில் கொண்டு இருக்கிறார்கள். எனவே வீரர்களை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் அதனை உணர்ந்து இருக்கிறார்கள். வீரர்கள் அடிப்படை ஆட்ட யுக்தியை சரியாக பின்பற்ற வேண்டும் என்பதே எனது ஆலோசனையாகும். ஆட்டத்தை காண வரும் ரசிகர்களை 12-வது வீரராக கருதி அவர்களின் ஆற்றலை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டில் நடந்த பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் அயர்லாந்து அணியும், உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று யாரும் நினைத்து இருப்பார்களா?. எல்லா அணிகளும் தங்களுக்கென்று தனி யுக்தியை வகுத்து செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நாள் எப்படி அமைகிறதோ? அதனை பொறுத்தே முடிவு இருக்கும். லீக் சுற்றில் முதலிடத்தை பிடித்து நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்பதே எங்களது இலக்காகும். ஆசிய விளையாட்டு போட்டியில் கண்ட தோல்வியை நாங்கள் மறந்து விட்டோம். நீங்களும் அதனை மறந்து விடுங்கள். எல்லா போட்டிகளிலும் முதல் ஆட்டம் முக்கியமானது என்பதை புரிந்து இருக்கிறோம். முதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் 40 முதல் 50 சதவீதம் நெருக்கடி விலகும். முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று முழு புள்ளியை பெற விரும்புகிறோம். எந்தவொரு அணிக்கு எதிராகவும் தாக்குதல் ஆட்டத்தை தொடுப்பதில் சமரசம் செய்யமாட்டோம் என்று அவர் கூறினார்.



Next Story