பாகிஸ்தான் ஆக்கி அணியின் பயிற்சியாளர் மீது புகார்


பாகிஸ்தான் ஆக்கி அணியின் பயிற்சியாளர் மீது புகார்
x
தினத்தந்தி 7 Dec 2018 9:15 PM GMT (Updated: 7 Dec 2018 8:39 PM GMT)

உதவி பயிற்சியாளர் டேனிஷ் கலீம் அடையாள அட்டை இல்லாமல் வீரர்கள் இருக்கும் இடத்துக்கு செல்ல முயன்ற போது பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்ததாகவும், அவர்களிடம் அதிகார தோரணையில் நடந்து கொண்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவனேஸ்வரம்,

உலக கோப்பை ஆக்கி போட்டியில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் அணியின் உதவி பயிற்சியாளர் டேனிஷ் கலீம் அடையாள அட்டை இல்லாமல் வீரர்கள் இருக்கும் இடத்துக்கு செல்ல முயன்ற போது பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்ததாகவும், அவர்களிடம் டேனிஷ் கலீம் அதிகார தோரணையில் நடந்து கொண்டதாகவும் ஆக்கி இந்தியா அமைப்பு சார்பில் சர்வதேச ஆக்கி பெடரே‌ஷன் டெக்னிக்கல் கமிட்டியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் சீனியர் கால் பாதத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக இந்த போட்டி தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மலேசியாவுக்கு எதிரான போட்டியில் முரட்டுத்தனமாக விளையாடியதால் பாகிஸ்தான் அணியின் துணை கேப்டன் அம்மத் பட் ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெதர்லாந்துக்கு எதிராக நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆடும் பாகிஸ்தான் அணிக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது.

இது குறித்து பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் தாகீர் அகமது தர் அளித்த பேட்டியில், ‘கடந்த சில நாட்கள் எங்களுக்கு மிகவும் கடினமானதாக அமைந்துள்ளது. எங்களது அதிக சக்தியை விளையாட்டு தவிர வேறு வி‌ஷயங்களுக்காக வீணாக்கி இருக்கிறோம். எந்தவித காரணமும் இல்லாமல் எங்களது துணை கேப்டனுக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. நியாயமற்ற தடையை எதிர்த்து முறையிட்டு இருக்கிறோம். தற்போது எங்களது உதவி பயிற்சியாளர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய விசாரணையை சந்தித்து வருகிறோம். மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டம் முடிந்ததும் சில குறிப்புகள் எழுதி அதனை மானேஜர் ஹசன் சர்தாரிடம் கொடுக்குமாறு உதவி பயிற்சியாளர் டேனிஷ் கலீமை அனுப்பினேன். பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்ததால் அவர் அதனை கொடுக்க முடியாமல் திரும்பி வந்தார். எதிர்பாராதவிதமாக அவர் தன்னுடைய அடையாள அட்டையை மறந்து உடைமாற்றும் அறையில் வைத்து விட்டு சென்று விட்டார். ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் தரக்குறைவாக நடந்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.


Next Story