41 அணிகள் பங்கேற்கும் தேசிய ஆக்கி போட்டி சென்னையில் 7–ந் தேதி தொடங்குகிறது


41 அணிகள் பங்கேற்கும் தேசிய ஆக்கி போட்டி சென்னையில் 7–ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 3 Jan 2019 9:30 PM GMT (Updated: 3 Jan 2019 7:34 PM GMT)

ஆக்கி இந்தியா அமைப்பின் தமிழ்நாடு பிரிவு சார்பில் 9–வது தேசிய ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் வருகிற 7–ந் தேதி முதல் 20–ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை,

ஆக்கி இந்தியா அமைப்பின் தமிழ்நாடு பிரிவு சார்பில் 9–வது தேசிய ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் வருகிற 7–ந் தேதி முதல் 20–ந் தேதி வரை நடக்கிறது. எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் ஐ.சி.எப். மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. கால் இறுதியில் இருந்து அனைத்து ஆட்டங்களும் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது. இந்த போட்டியில் மொத்தம் 41 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. தமிழக அணி ‘ஜி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. புதுச்சேரி, அசாம், மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை, இமாச்சலபிரதேசம் ஆகிய அணிகள் அந்த பிரிவில் இடம் பிடித்துள்ள மற்ற அணிகளாகும். லீக் ஆட்டங்கள் தினசரி காலையில் 7.30 மணி முதல் மாலை 6 மணி வரை 2 மைதானங்களிலும் நடக்கிறது. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பெறும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டியில் முதல் 2 இடத்தை பிடிக்கும் அணிகள் மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் இந்த மாதம் இறுதியில் நடைபெறும் ‘ஏ’ பிரிவு தேசிய போட்டிக்கு முன்னேறும். இந்த போட்டியில் தமிழக அணி செந்தில்குமார் தலைமையில் களம் காணுகிறது. அணியில் சீனியர் வீரரான ஸ்ரீஜேஷ் கோல்கீப்பராக இடம் பெற்றுள்ளார்.

இந்த தகவலை ஆக்கி இந்தியா அமைப்பின் தமிழ்நாடு பிரிவு தலைவர் சேகர் மனோகரன், ரேணுகா லட்சுமி, சென்னை மாவட்ட ஆக்கி சங்க தலைவர் வி.பாஸ்கரன், போட்டி இயக்குனர் முகமது முனீர் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தனர். பின்னர் தமிழக அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் நிருபர்களிடம் பேசுகையில், ‘தேசிய ஆக்கி போட்டிக்காக தமிழக அணி கடந்த 2 மாதமாக சிறப்பாக தயாராகி இருக்கிறது. வீரர்கள் அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர். எனவே தமிழக அணி தேசிய ‘ஏ’ பிரிவு போட்டிக்கு நிச்சயம் தகுதி பெறும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story