தேசிய ஆக்கி போட்டி: வெற்றியுடன் தொடங்கியது தமிழக அணி


தேசிய ஆக்கி போட்டி: வெற்றியுடன் தொடங்கியது தமிழக அணி
x
தினத்தந்தி 9 Jan 2019 11:00 PM GMT (Updated: 9 Jan 2019 10:09 PM GMT)

தேசிய ஆக்கியின் முதலாவது லீக் ஆட்டத்தை, தமிழக அணி வெற்றியுடன் தொடங்கியது.

சென்னை,

9-வது தேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் ஐ.சி.எப். மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 41 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘ஜி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி தனது முதலாவது லீக்கில் நேற்று மத்திய தொழிலக பாதுகாப்பு படை அணியுடன் (சி.ஐ.எஸ்.எப்.) மோதியது. தமிழக அணியில் எதிர்பார்க்கப்பட்ட முன்னணி வீரர் ஸ்ரீஜேஷ் ஆடவில்லை.

செந்தில் தலைமையில் களம் கண்ட தமிழக அணி துடிப்புடன் விளையாடியது. ஒரு கட்டத்தில் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலை ஏற்பட்டாலும், பிற்பகுதியில் தமிழக அணி அடுத்தடுத்து இரண்டு கோல்களை திணித்தது. முடிவில் தமிழக அணி 4-2 என்ற கோல் கணக்கில் சி.ஐ.எஸ்.எப்.-ஐ தோற்கடித்து இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியது. தமிழக அணியில் ஜோஷ்வா (7-வது நிமிடம்), ராயர் வினோத் (34-வது நிமிடம்), செல்வராஜ் (45-வது நிமிடம்), மணிகண்டன் (58-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர்.

தமிழக அணி அடுத்த ஆட்டத்தில் அசாம் அணியை ஐ.சி.எப். மைதானத்தில் நாளை காலை 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.


Next Story