12 அணிகள் பங்கேற்கும் மாநில ஆக்கி போட்டி - சென்னையில் நாளை மறுநாள் தொடங்குகிறது


12 அணிகள் பங்கேற்கும் மாநில ஆக்கி போட்டி - சென்னையில் நாளை மறுநாள் தொடங்குகிறது
x
தினத்தந்தி 26 Feb 2019 10:15 PM GMT (Updated: 26 Feb 2019 7:15 PM GMT)

சென்னையில், 12 அணிகள் பங்கேற்கும் மாநில ஆக்கி போட்டி நாளை மறுநாள் தொடங்க உள்ளன.

சென்னை,

இந்தியன் வங்கி விளையாட்டு மற்றும் மனமகிழ் மன்றம் சார்பில் 3-வது மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் (1-ந் தேதி) முதல் 6-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தெற்கு ரெயில்வே, ஐ.சி.எப்., வருமானவரி, கலால் வரி, தமிழ்நாடு போலீஸ், சென்னை மாநகர போலீஸ், சாய், தபால் துறை, ஏ.ஜி.அலுவலகம், ஆக்கி அகாடமி ஆகிய 12 அணிகள் கலந்து கொள்கின்றன.

‘நாக்-அவுட்’ முறையில் நடைபெறும் இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.40 ஆயிரமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.30 ஆயிரமும், 3-வது இடம் பெறும் அணிக்கு ரூ.20 ஆயிரமும் மற்றும் பரிசு கோப்பையும் வழங்கப்படும். நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சாய்-ஏ.ஜி.அலுவலக அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு வழங்கப்படும் பரிசு கோப்பை அறிமுக நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.

இந்தியன் வங்கியின் செயல் இயக்குனர் வி.வி.ஷெனாய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார். இந்தியன் வங்கி விளையாட்டு மற்றும் மனமகிழ் மன்ற தலைவர் எம்.நாகராஜன், செயலாளர் ஆர்.சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Next Story