டெல்லி ஆக்கி போட்டியில் வீரர்கள் இடையே திடீர் மோதல்


டெல்லி ஆக்கி போட்டியில் வீரர்கள் இடையே திடீர் மோதல்
x
தினத்தந்தி 25 Nov 2019 10:39 PM GMT (Updated: 25 Nov 2019 10:39 PM GMT)

டெல்லி ஆக்கி போட்டியில் வீரர்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

புதுடெல்லி,

நேரு கோப்பை ஆக்கி போட்டி டெல்லியில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் போலீஸ்-பஞ்சாப் நேஷனல் வங்கி அணிகள் மோதின. இதில் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்த போது இரு அணி வீரர்களுக்கு இடையே திடீரென மோதல் வெடித்தது. இதில் ஒருவரையொருவர் ஆக்கி ஸ்டிக்கால் தாக்கி கொண்டனர். போட்டி அமைப்பாளர்கள் விரைந்து சென்று இரு அணியினரையும் சமாதானப்படுத்தினார்கள். சில நிமிட தடங்கலுக்கு பிறகு போட்டி தொடர்ந்து நடைபெற்றது. ஆடுகள நடுவர் இரு அணியிலும் தலா 3 வீரர்களுக்கு சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றினார். பஞ்சாப் போலீஸ் அணியின் மானேஜருக்கும் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. மோதல் சம்பவத்துக்கு பிறகு இரு அணிகளும் தலா 8 வீரர்களுடன் விளையாடியது. முடிவில் பஞ்சாப் நேஷனல் வங்கி அணி 6-3 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் போலீஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மோதல் சம்பவம் குறித்து ஆக்கி இந்தியா அமைப்பின் தலைமை செயல் அதிகாரி எலினா நார்மன் கருத்து தெரிவிக்கையில், ‘நடந்த சம்பவம் குறித்து போட்டி இயக்குனரிடம் அறிக்கை கேட்டு இருக்கிறோம். அறிக்கை கிடைத்ததும் ஆக்கி இந்தியா உரிய நடவடிக்கை எடுக்கும்’ என்றார்.

Next Story