புரோ லீக் ஆக்கி: இந்தியா-பெல்ஜியம் இன்று மோதல்


புரோ லீக் ஆக்கி: இந்தியா-பெல்ஜியம் இன்று மோதல்
x
தினத்தந்தி 7 Feb 2020 10:00 PM GMT (Updated: 7 Feb 2020 7:31 PM GMT)

சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் புரோ லீக் ஆக்கி போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தயாராகும் வகையில் நடத்தப்படும் இந்த போட்டியில் தலைச்சிறந்த 9 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

புவனேசுவரம்,

தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்திய அணி தனது முதலாவது சுற்றில் நெதர்லாந்துடன் இரண்டு முறை மோதியது. முதல் ஆட்டத்தில் 5-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை தோற்கடித்த இந்தியா அடுத்த ஆட்டத்தில் 3-3 என்ற கோல் கணக்கில் சமன் ஆன பிறகு பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி இதுவரை 5 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் உலக சாம்பியன் பெல்ஜியத்துடன் இன்று மல்லுகட்டுகிறது. இந்த ஆட்டம் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

பெல்ஜியம் அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 11 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பெல்ஜியம் கேப்டன் தாமஸ் பிரைல்ஸ் கூறுகையில், ‘இந்திய அணி நல்ல நிலையில் உள்ளது. அவர்கள் கடும் சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக இது போன்ற கடினமான அணிகளுடன் மோதும் போது தான் நாங்கள் முன்னேற்றம் காண முடியும். இதனால் இந்த ஆட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்’ என்றார். இந்தியா-பெல்ஜியம் அணிகள் மோதும் 2-வது ஆட்டமும் இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

Next Story