புரோ லீக் ஆக்கி: பெல்ஜியத்துக்கு அதிர்ச்சி அளித்தது, இந்திய அணி


புரோ லீக் ஆக்கி: பெல்ஜியத்துக்கு அதிர்ச்சி அளித்தது, இந்திய அணி
x
தினத்தந்தி 8 Feb 2020 10:45 PM GMT (Updated: 8 Feb 2020 8:51 PM GMT)

ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, உலக சாம்பியன் பெல்ஜியத்தை எதிர்கொண்டது.

புவனேசுவரம்,

சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் புரோ லீக் ஆக்கி போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. தலைச்சிறந்த 9 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். இதில் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, உலக சாம்பியன் பெல்ஜியத்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்துக்கு அதிர்ச்சி அளித்து தொடர்ச்சியாக 3-வது வெற்றியை ருசித்தது. இந்திய அணியில் மன்தீப் சிங் 2-வது நிமிடத்திலும், ரமன்தீப்சிங் 47-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். பெல்ஜியம் அணியில் கவுதிர் போக்கார்ட் 33-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் திருப்பினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளது. இதே மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Next Story