மாநில ஆக்கி திருவள்ளூர் அணி 2-வது வெற்றி


மாநில ஆக்கி திருவள்ளூர் அணி 2-வது வெற்றி
x
தினத்தந்தி 27 Feb 2020 10:32 PM GMT (Updated: 27 Feb 2020 10:32 PM GMT)

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்-அமைச்சர் கோப்பைக் கான மாநில ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

சென்னை,

போட்டியை பள்ளி கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். விழாவுக்கு விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் தலைமை தாங்கினார். ‘நாக்-அவுட்’ மற்றும் லீக் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் 37 மாவட்ட அணிகள் கலந்து கொண்டுள்ளன. நேற்று நடந்த ஆண்கள் பிரிவு தொடக்க ஆட்டத்தில் திருவள்ளூர் அணி 5-1 என்ற கோல் கணக்கில் விழுப்புரம் அணியை தோற்கடித்தது.

பின்னர் நடந்த மற்றொரு ஆட்டத்தில் திருவள்ளூர் அணி 4-0 என்ற கோல் கணக்கில் புதுக்கோட்டை மாவட்ட அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. மற்ற ஆட்டங்களில் ஈரோடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் கரூரையும், வேலூர் அணி 4-0 என்ற கோல் கணக்கில் காஞ்சீபுரத்தையும், நீலகிரி அணி 7-0 என்ற கோல் கணக்கில் பெரம்பலூரையும், திருச்சி அணி 7-0 என்ற கோல் கணக்கில் கள்ளக்குறிச்சியையும், சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவையையும், ராமநாதபுரம் அணி 5-0 என்ற கோல் கணக்கில் திருவாரூரையும், கடலூர் அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 7-6 என்ற கோல் கணக்கில் திருப்பூர் அணியையும் தோற்கடித்தன.

Next Story