இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்


இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்
x
தினத்தந்தி 15 July 2020 9:45 PM GMT (Updated: 15 July 2020 9:33 PM GMT)

இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணியினருக்கான பயிற்சி முகாம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் நடந்தது. 

கொரோனா ஊடரங்கு காரணமாக பாதிக்கப்பட்ட இந்த பயிற்சி முகாமில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் கடந்த மாதம் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டது. ஒரு மாத இடைவெளிக்கு பிறகு இந்திய ஆக்கி அணிகளுக்கான பயிற்சி முகாமை பெங்களூருவில் வருகிற 19-ந் தேதி தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. 

ஆனால் தற்போது பெங்களூருவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அங்கு வருகிற 22-ந் தேதி வரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாமை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் பயிற்சி முகாமை தொடங்க வழி எதுவுமில்லை என்று சாய் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story