கேப்டன் மன்பிரீத் சிங் உள்பட 5 இந்திய ஆக்கி அணி வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு


கேப்டன் மன்பிரீத் சிங் உள்பட 5 இந்திய ஆக்கி அணி வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 7 Aug 2020 10:54 PM GMT (Updated: 7 Aug 2020 10:54 PM GMT)

கேப்டன் மன்பிரீத் சிங் உள்பட 5 இந்திய ஆக்கி அணி வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

பெங்களூரு,

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய ஆக்கி அணிகளுக்கான தேசிய பயிற்சி முகாம் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) பயிற்சி மையத்தில் நடந்து வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஜூன் மாதம் இறுதியில் வீரர், வீராங்கனைகள் முகாமில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்திய ஆக்கி அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு வருகிற 20-ந்தேதி பெங்களூருவில் உள்ள ‘சாய்’ பயிற்சி மையத்தில் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வீரர்கள் அனைவரும் பெங்களூருக்கு வந்துள்ளனர். கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளின்படி பயிற்சி முகாம் தொடங்குவதற்கு முன்னதாக வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டன. இதில் இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் மற்றும் சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண்குமார், கிரிஷன் பஹதூர் பதாக் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த 5 வீரர்களும் ‘சாய்’ மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து கேப்டன் மன்பிரீத் சிங் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சாய் வளாகத்தில் நான் சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். வீரர்களுக்கு கட்டாய பரிசோதனை நடத்தி பிரச்சினையை சரியான நேரத்தில் கண்டுபிடித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்ட ‘சாய்’ நிர்வாகத்தினரின் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது நான் நன்றாக இருக்கிறேன். விரைவில் சகஜநிலைக்கு திரும்புவேன் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story