இந்திய ஆக்கி அணி வீரர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர்


இந்திய ஆக்கி அணி வீரர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர்
x
தினத்தந்தி 17 Aug 2020 11:56 PM GMT (Updated: 17 Aug 2020 11:56 PM GMT)

இந்திய ஆக்கி அணி வீரர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்.

பெங்களூரு,

இந்திய ஆக்கி அணிகளின் தேசிய பயிற்சி முகாம் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் (சாய்) நாளை தொடங்குகிறது. இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி வீரர், வீராங்கனைகளுக்கு கடந்த வாரம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் மற்றும் சுரேந்தர்குமார், ஜஸ்கரன் சிங், வருண்குமார், கிரிஷன் பஹதுர் பதாக், மன்தீப் சிங் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்கள் 6 பேரும் சாய் வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மன்தீப் சிங்குக்கு ரத்தத்தில் இருக்க வேண்டிய ஆக்சிஜன் அளவு வழக்கத்தை விட குறைந்ததை அடுத்து அவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து மற்ற வீரர்களும் அதே ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது 6 வீரர்களும் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு உள்ளனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட இரண்டு பரிசோதனையிலும் தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. இதனால் 6 வீரர்களும் ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று மாலை ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். அவர்கள் சாய் வளாகத்தில் இன்னும் சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story