அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய அணி சிறப்பாக செயல்படும் கேப்டன் மன்பிரீத் சிங் நம்பிக்கை


அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய அணி சிறப்பாக செயல்படும் கேப்டன் மன்பிரீத் சிங் நம்பிக்கை
x
தினத்தந்தி 31 March 2021 8:02 PM GMT (Updated: 31 March 2021 8:02 PM GMT)

அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய அணி சிறப்பாக செயல்படும் கேப்டன் மன்பிரீத் சிங் நம்பிக்கை.

பெங்களூரு, 

புரோ ஆக்கி லீக் போட்டி தொடரில் இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் வருகிற 11 மற்றும் 12-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாகவும், அதற்கு பிறகும் தலா 2 ஆட்டங்களில் இந்திய அணி, அர்ஜென்டினாவுடன் மோதுகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி மன்பிரீத் சிங் தலைமையில் பெங்களூருவில் இருந்து நேற்று காலை புறப்பட்டு சென்றது.

முன்னதாக இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் அளித்த பேட்டியில், ‘சவால் நிறைந்த போட்டிகளில் ஒரு ஆண்டுக்கு மேலாக நமது அணி விளையாடாதது பெரிய பின்னடைவாகும். அதேநேரத்தில் கொரோனா பரவல் காரணமாக உலகில் உள்ள எல்லா அணிகளுமே இதே பிரச்சினையை சந்தித்துள்ளது. சமீபத்தில் நடந்த ஐரோப்பிய சுற்றுப்பயண போட்டிகளில் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக நான் பங்கேற்கவில்லை. ஆனாலும் அந்த போட்டிகளை நான் உன்னிப்பாக கவனித்து வந்தேன். அதில் நமது அணி ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக செயல்பட்ட விதம் மிகுந்த ஊக்கம் அளிப்பதாக இருந்தது. அதேபோல் இந்த தொடரிலும் நாங்கள் தோல்வியை சந்திக்காமல் வெற்றிகரமாக செயல்படுவோம் என்று எதிர்பார்க்கிறோம். அர்ஜென்டினா பயணத்துக்கான நமது அணியில் சில இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். தலைசிறந்த அணிக்கு எதிராக தங்கள் திறமையை நிரூபிக்க இளம் வீரர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த சவாலான சமயத்தில் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளும் சிறப்பானதாகும். அதனை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

கடந்த ஆண்டில் கொரோனா பாதிப்பில் சிக்கி மீண்ட நான் மனரீதியாக அதிக போராட்டத்தை சந்தித்ததாக நினைக்கிறேன். நான் பழைய பார்முக்கு திரும்ப கடினமாக உழைத்து இருக்கிறேன். இந்த பயணம் எங்கள் அணியின் செயல்பாட்டை அறிந்து கொள்வதற்கு மட்டுமின்றி, தனிப்பட்ட முறையில் எனது ஆட்டத்தில் எந்த வகையில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதை புரிந்து கொள்வதற்கும் வாய்ப்பாக இருக்கும்’ என்று தெரிவித்தார். 

Next Story