டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஆண்கள் ஆக்கி அணி அறிவிப்பு


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஆண்கள் ஆக்கி அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Jun 2021 12:52 AM GMT (Updated: 19 Jun 2021 12:52 AM GMT)

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய ஆண்கள் ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

16 பேர் கொண்ட அணியில் இடம் பிடித்துள்ள 10 வீரர்களுக்கு இது அறிமுக ஒலிம்பிக் போட்டியாகும். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் விளையாடிய கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ், மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், ருபிந்தர் பால்சிங், சுரேந்தர் குமார், மன்தீப் சிங் ஆகியோர் மீண்டும் அணியில் அங்கம் வகிக்கின்றனர். காயம் காரணமாக கடந்த ஒலிம்பிக்கில் இருந்து விலகிய பிரேந்திர லக்ரா மீண்டும் தேர்வாகியுள்ளார். ஆகாஷ்தீப் சிங், ரமன்தீப் சிங் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் சமீபத்தில் கேப்டன் பொறுப்பை வகித்த மன்பிரீத் சிங் கேப்டனாக நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, 3 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்பெயின், ஜப்பான் ஆகியவை அந்த பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளாகும். ஒரு 
காலகட்டத்தில் ஆக்கியில் அசைக்க முடியாத அணியாக விளங்கிய இந்தியா 8 முறை தங்கப்பதக்கத்தை தனதாக்கி சரித்திரம் படைத்தது. கடைசியாக 1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய 
அணி அதன் பிறகு பதக்க மேடையில் ஏறியதில்லை. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஆக்கி அணி வீரர்கள் வருமாறு:-

கோல்கீப்பர்: ஸ்ரீஜேஷ், பின்களம்: ஹர்மன்பிரீத் சிங், ருபிந்தர் பால்சிங், சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், பிரேந்திர லக்ரா, நடுகளம்: ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், நீலகண்ட ஷர்மா, சுமித், முன்களம்: ஷாம்ஷெர் 
சிங், தில்பிரீத் சிங், குர்ஜந்த் சிங், லலித்குமார் உபாத்யாய், மன்தீப் சிங்.

Next Story