ஒலிம்பிக் மகளிர் ஆக்கி: இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் பிரிட்டன் வெற்றி


ஒலிம்பிக் மகளிர் ஆக்கி: இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் பிரிட்டன் வெற்றி
x
தினத்தந்தி 28 July 2021 2:52 AM GMT (Updated: 28 July 2021 2:52 AM GMT)

ஒலிம்பிக் மகளிர் ஆக்கி போட்டியின் லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி பிரிட்டன் அபார வெற்றிபெற்றது.

டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இன்று நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய மகளிர் ஆக்கி அணி பிரிட்டன் மகளிர் ஆக்கி அணியை எதிர்கொண்டது. 

ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே பிரிட்டன் வீராங்கனை ஹனா மார்ட்டின் முதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் ஹனா இரண்டாவது கோல் அடித்தார். பின்னர் ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் இந்திய அணி வீராங்கனை ஷர்மிளா தேவி கோல் அடித்து இந்திய அணியின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார். இதனால், ஆட்டம் சூடுபிடித்தது.

ஆனால், போட்டியின் 3-வது கால்பாகத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய பிரிட்டன் வீராங்கனைகள் கோல் அடித்தனர். இதனால், பிரிட்டன் அணியின் கோல் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. 

அதன்பின்னர், போட்டியின் 57-வது நிமிடத்தில் பிரிட்டன் வீராங்கனை கிரேஸ் கோல் அடித்ததால் அந்த அணியின் கோல் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்தது. ஆனால், இறுதிவரை போராடிய இந்திய அணியால் 1 கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால், இந்தியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரிட்டன் அணி அபார வெற்றிபெற்றது. 

லீக் சுற்றின் அடுத்த போட்டில் இந்திய பெண்கள் ஆக்கி அணி அயர்லாந்தை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் மோதும் போட்டி நாளைமறுநாள் நடைபெற உள்ளது.

Next Story