ஆண்கள் ஆக்கியில் 41 ஆண்டுக்கு பிறகு அரைஇறுதிக்கு முன்னேறியது இந்தியா


ஆண்கள் ஆக்கியில் 41 ஆண்டுக்கு பிறகு அரைஇறுதிக்கு முன்னேறியது இந்தியா
x
தினத்தந்தி 1 Aug 2021 3:42 PM GMT (Updated: 1 Aug 2021 9:58 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் ஆக்கி போட்டியின் கால்இறுதியில் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தி 41 ஆண்டுக்கு பிறகு அரைஇறுதிக்குள் நுழைந்தது.

டோக்கியோ, 

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் லீக் ஆட்டங்களில் அசத்தியதன் மூலம் (4 வெற்றி, ஒரு தோல்வி) தரவரிசையில் சிறந்த நிலையாக 3-வது இடத்துக்கு முன்னேறிய இந்திய அணி, 6-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தை எதிர்கொண்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை தொடுத்து ஆதிக்கம் செலுத்தியது. 7-வது நிமிடத்தில் இந்திய வீரர் தில்பிரீத் சிங் முதல் கோல் அடித்தார். 16-வது நிமிடத்தில் மற்றொரு இந்திய வீரர் குர்ஜந்த் சிங் கோல் போட்டார்.

45-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் சாமுவேல் இயான் வார்ட் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி பதில் கோல் திருப்பினார். இதைத் தொடர்ந்து 57-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்திக் சிங் 3-வது கோலை அடித்து மிரட்டினார். அவர் அடித்த பந்து இங்கிலாந்து கோல் கீப்பர் ஆலிவர் பெய்னி காலால் தடுத்து திரும்பியது. அதனை தன்வசப்படுத்திய ஹர்திக் மீண்டும் வலைக்குள் அனுப்பினார்.

முன்னதாக இந்திய அணியின் கேப்டன் மன்பீரித் சிங் 54-வது நிமிடத்திலும், இங்கிலாந்து வீரர் லியாம் அன்செல் 59-வது நிமிடத்திலும் நடுவரால் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இதனால் அதன் பிறகு இரு அணியினரும் 10 வீரர்களின் விளையாட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒலிம்பிக்கில் 41 ஆண்டுக்கு பிறகு அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. 8 முறை சாம்பியனான இந்திய அணி 1980-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பிறகு தொடர்ந்து தடுமாற்றத்தை சந்தித்து வந்தது. அதன் பிறகு தற்போது தான் அரைஇறுதியை எட்டிப்பிடித்து பதக்க வாய்ப்பை நெருங்கி இருக்கிறது.

மற்றொரு கால்இறுதியில் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தது.

இன்னொரு கால்இறுதியில் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் ஆஸ்திரேலியா 3-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை விரட்டியடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. இதே போல் பெல்ஜியம் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை தோற்கடித்தது.

நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, உலக சாம்பியனான தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது. காலை 7 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை சோனி டென் 4 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. மற்றொரு அரைஇறுதியில் ஆஸ்திரேலியா-ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Next Story