ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-தென்கொரியா ஆட்டம் ‘டிரா’


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-தென்கொரியா ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 14 Dec 2021 10:09 PM GMT (Updated: 14 Dec 2021 10:09 PM GMT)

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்தியா-தென்கொரியா இடையிலான லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது.

டாக்கா,

5 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, தென்கொரியாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 4-வது நிமிடத்தில் இந்திய வீரர் லலித் உபாத்யாய் முதல் கோல் அடித்து அசத்தினார். 18-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய அணியின் துணைகேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோலாக்கினார். இதனால் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆனால் தென்கொரியா அணி பதில் கோல் திருப்ப தனது தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. அத்துடன் அந்த அணியினர் இந்திய அணியின் கோல் எல்லையை அடிக்கடி முற்றுகையிட்டு கடும் நெருக்கடி கொடுத்தனர். 41-வது நிமிடத்தில் தென்கொரியாவின் ஜோங்யுன் ஜாங்கும், 46-வது நிமிடத்தில் சுங்யுன் கிம்மும் கோல் வலைக்குள் பந்தை திணித்து சமநிலையை ஏற்படுத்தினர். இந்திய அணி பெனால்டி கார்னர் உள்ளிட்ட பல கோல் அடிக்கும் வாய்ப்புகளை கோட்டை விட்டது. 

மேலும் இந்திய அணியினர் கோல் போட எடுத்த நல்ல முயற்சிகளை தென்கொரியா கோல்கீப்பர் ஜாக்யேன் கிம் அபாரமாக செயல்பட்டு முறியடித்தார். முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற பிறகு மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி கலந்து கொண்ட முதல் போட்டி இது என்பதால் வெற்றியுடன் தொடங்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

பாகிஸ்தான்-ஜப்பான் அணிகள் மோதிய இன்னொரு லீக் ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது. இந்திய அணி இன்று நடைபெறும் தனது 2-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை (மாலை 3.30 மணி) சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் தென்கொரியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

Next Story