ஆசிய கோப்பை ஆக்கி: கடைசி லீக்கில் ஜப்பானை பந்தாடியது இந்தியா


ஆசிய கோப்பை ஆக்கி: கடைசி லீக்கில் ஜப்பானை பந்தாடியது இந்தியா
x
தினத்தந்தி 19 Dec 2021 11:28 PM GMT (Updated: 19 Dec 2021 11:28 PM GMT)

ஆசிய கோப்பை ஆக்கி போட்டியின் கடைசி லீக்கில் இந்திய அணி ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

டாக்கா, 

5 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று ஜப்பானை எதிர்கொண்டது.

 தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி கோல் மழை பொழிந்து ஜப்பானை நிலைகுலைய வைத்தது. ஹர்மன்பிரீத் சிங் (10 மற்றும் 53 நிமிடம்), தில்பிரீத் சிங் (23-வது நிமிடம்), ஜெரம்பிரீத் சிங் (34-வது நிமிடம்), சுமித் (46-வது நிமிடம்), ஷம்ஷிர் சிங் (54-வது நிமிடம்) ஆகிய இந்திய வீரர்கள் கோல் போட்டனர். ஜப்பானால் கடைசி வரை ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை. முடிவில் இந்தியா 6-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை ஊதித்தள்ளியது. 

ஏற்கனவே அரைஇறுதியை உறுதி செய்து விட்ட இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி (ஹாட்ரிக்) இதுவாகும். தனது தொடக்க லீக்கில் தென்கொரியாவுடன் ‘டிரா’ கண்ட இந்திய அணி அதன் பிறகு வங்காளதேசம், பாகிஸ்தானை பந்தாடியது குறிப்பிடத்தக்கது.

லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா (10 புள்ளி), தென்கொரியா (6 புள்ளி), பாகிஸ்தான் (5 புள்ளி), ஜப்பான் (5 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. 4 ஆட்டங்களிலும் தோற்ற வங்காளதேசம் வெளியேறியது.

நாளை நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் தென்கொரியா- பாகிஸ்தான், இந்தியா- ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

Next Story