மாநில கைப்பந்து போட்டி: இறுதிப்போட்டியில் எஸ்.டி.ஏ.டி. அணி


மாநில கைப்பந்து போட்டி: இறுதிப்போட்டியில் எஸ்.டி.ஏ.டி. அணி
x
தினத்தந்தி 15 Dec 2017 10:30 PM GMT (Updated: 15 Dec 2017 8:31 PM GMT)

67-வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

நேற்று நடந்த பெண்கள் பிரிவின் அரைஇறுதியில் ஜேப்பியார் அணி 25-13, 25-14, 19-25, 18-25, 15-12 என்ற செட் கணக்கில் போராடி டாக்டர் சிவந்தி கிளப்பை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. ஜேப்பியார் அணியில் ஐஸ்வர்யா, ஆர்யாவும், டாக்டர் சிவந்தி கிளப் அணியில் பரிமளம், ஸ்டான்சியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

மற்றொரு அரைஇறுதியில் எஸ்.டி.ஏ.டி. 25-20, 25-21, 25-13 என்ற நேர்செட்டில் பி.கே.ஆர். (கோபி) அணியை எளிதில் வென்றது. எஸ்.டி.ஏ.டி. அணியில் அனுப்பிரியா, ரஞ்சிதாவும், பி.கே.ஆர். அணியில் ஷாலினியும் நன்றாக ஆடினர். இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் எஸ்.டிஏ.டி.-ஜேப்பியார் அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

ஆண்கள் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டங்களில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி) அணி 25-22, 26-28, 25-17, 25-16 என்ற செட் கணக்கில் தமிழ்நாடு போலீஸ் அணியையும், சென்னை ஸ்பைக்கர்ஸ் 23-25, 25-23, 27-25, 25-23 என்ற செட் கணக்கில் செயின்ட் ஜோசப்சையும், எஸ்.ஆர்.எம். அணி 25-23, 25-20, 25-23 என்ற செட் கணக்கில் இந்தியன் வங்கியையும் வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

Next Story