தமிழக வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ரூ.2¼ கோடி ஊக்கத்தொகை


தமிழக வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ரூ.2¼ கோடி ஊக்கத்தொகை
x
தினத்தந்தி 23 Jan 2018 10:45 PM GMT (Updated: 23 Jan 2018 8:25 PM GMT)

சர்வதேச போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ரூ.2¼ கோடி ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சென்னை,

2016-ம் ஆண்டு கவுகாத்தி மற்றும் ஷில்லாங்கில் நடைபெற்ற 12-வது தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.1 கோடியே 92 லட்சம் மற்றும் அவர்களது பயிற்சியாளர்கள் 21 பேருக்கு ஊக்கத் தொகையாக ரூ.28 லட்சத்து 80 ஆயிரம், 2017-ம் ஆண்டு ஐஸ்லாந்து நாட்டில் நடந்த பெண்களுக்கான உலகக் கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு போட்டியில் முதலிடம் பெற்ற தமிழக வீராங்கனை சி.ஏ.பவானிதேவிக்கு சிறப்பினமாக ரூ.5 லட்சம் என மொத்தம் 2 கோடியே 25 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று வழங்கினார்.

இதே போல் மராட்டிய மாநிலம், அவுரங்காபாத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான குழு மற்றும் தனிநபர் பிரிவு ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. இப்போட்டியில் பதக்கங்கள் வென்ற 25 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தாங்கள் வென்ற கோப்பைகளை காண்பித்து வாழ்த்து பெற்றார்கள். இந்த நிகழ்ச்சியின் போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story