இந்திய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி


இந்திய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி
x
தினத்தந்தி 1 Feb 2018 3:28 AM GMT (Updated: 1 Feb 2018 3:28 AM GMT)

இந்திய ஓபன் பேட்மிண்டனில் சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் எளிதில் வெற்றி பெற்றனர்.

புதுடெல்லி,

மொத்தம் ரூ.2¼ கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் பெரும்பாலான ஆட்டங்கள் ஒரு தரப்பாகவே அமைந்தன.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தனது முதல் சுற்றில் 21-15, 21-9 என்ற நேர் செட்டில் சோபி ஹோம்போ டாலை (டென்மார்க்) விரட்டினார். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய மங்கையான பி.வி.சிந்து 21-10, 21-13 என்ற நேர் செட்டில் நடாலியா கோச் ரோட்டேவை (டென்மார்க்) 33 நிமிடங்களில் பந்தாடினார். ருத்விகா, ஆகர்ஷி, முக்தா அக்ரி ஆகிய இந்திய வீராங்கனைகளும் முதல் சுற்றை வெற்றிகரமாக கடந்தனர். ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின் (ஸ்பெயின்) தன்னை எதிர்த்த ஹேம்ராசாட்டனுனை (தாய்லாந்து) 21-15, 21-11 என்ற நேர் செட்டில் வென்று 2-வது சுற்றை எட்டினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-17, 21-17 என்ற நேர் செட்டில் லீ சேக்கை (ஹாங்காங்) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். காமன்வெல்த் விளையாட்டின் முன்னாள் சாம்பியனான இந்தியாவின் காஷ்யப் 21-14, 21-18 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ஹான்ஸ் கிரிஸ்டியனை வெளியேற்றினார். தகுதி நிலை வீரர் இந்தியாவின் ஸ்ரேயான்ஷ் ஜெய்ஸ்வால் 21-4, 21-6 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் பிரனாய்க்கு அதிர்ச்சி அளித்தார். மற்றொரு இந்திய வீரர் சாய் பிரனீத் 21-11, 17-21, 21-17 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் ராஜீவ் அவ்செப்பை போராடி வென்றார்.

Next Story