இந்திய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, கரோலினா வெளியேற்றம் அரைஇறுதிக்கு சிந்து முன்னேற்றம்


இந்திய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, கரோலினா வெளியேற்றம் அரைஇறுதிக்கு சிந்து முன்னேற்றம்
x
தினத்தந்தி 2 Feb 2018 10:00 PM GMT (Updated: 2 Feb 2018 8:35 PM GMT)

இந்திய ஓபன் பேட்மிண்டனில் சாய்னா, கரோலினா மரின் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினர். சிந்து அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

புதுடெல்லி,

இந்திய ஓபன் பேட்மிண்டனில் சாய்னா, கரோலினா மரின் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினர். சிந்து அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

சாய்னா, கரோலினா தோல்வி

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் பி.வி.சிந்து (இந்தியா), பீட்ரிஸ் கோரலெஸ்சுடன் (ஸ்பெயின்) பலப்பரீட்சை நடத்தினார். 54 நிமிடங்கள் நடந்த பரபரப்பான இந்த மோதலில் சிந்து 21-12, 19-21, 21-11 என்ற செட் கணக்கில் பீட்ரிசை தோற்கடித்து அரைஇறுதியை எட்டினார். அரைஇறுதியில் சிந்து, முன்னாள் உலக சாம்பியன் ராட்சனோக் இன்டானோனை (தாய்லாந்து) எதிர்கொள்கிறார். அவருக்கு எதிராக சிந்து இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி அதில் 4-ல் தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்தியாவின் சாய்னா நேவால் 10-21, 13-21 என்ற நேர் செட்டில் பீவென் ஜாங்கிடம் (அமெரிக்கா) வீழ்ந்தார். பந்தை அடிக்கடி வெளியே அடித்துவிட்டு தவறிழைத்ததால் சாய்னாவினால் 32 நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் போய் விட்டது. பீவென் ஜாங்குக்கு எதிராக 4-வது முறையாக மோதிய சாய்னா அதில் சந்தித்த முதல் தோல்வி இது தான். இதே போல் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினும் (ஸ்பெயின்) 12-21, 19-21 என்ற நேர் செட்டில் செங் கன்யியுடன் (ஹாங்காங்) அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.

காஷ்யப் வெளியேற்றம்

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீரர் காஷ்யப் 16-21, 18-21 என்ற நேர் செட்டில் சீனாவின் குயாவ் பின்னிடம் தோற்று நடையை கட்டினார். இதே போல் சாய்பிரனீத், சமீர் வர்மா ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் தோல்வி கண்டனர். இதன் மூலம் ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

பெண்கள் இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் நட்சத்திர ஜோடியான அஸ்வினி-ரெட்டி என்.சிக்கி ஆகியோர் 17-21, 21-23 என்ற நேர் செட்டில் சீனாவின் டு யூ-லீ யின் ஹய் இணையிடம் மண்ணை கவ்வினர். கலப்பு இரட்டையரில் ரங்கிரெட்டியுடன் கைகோர்த்து களம் இறங்கிய அஸ்வினிக்கு அதிலும் தோல்வியே பரிசாக கிடைத்தது. அதே சமயம் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா-ரெட்டி என்.சிக்கி ஜோடி கலப்பு இரட்டையர் பிரிவில் அரைஇறுதிக்கு முன்னேறி இருக்கிறது.

Next Story