ஒலிம்பிக், ஆசிய போட்டிகளில் சாதித்த வீரர்களின் ஓய்வூதியம் இரண்டு மடங்கு உயர்வு
ஒலிம்பிக், ஆசிய போட்டி உள்ளிட்ட மிகப்பெரிய போட்டிகளில் பதக்கம் வென்றவர்களின் ஓய்வூதியம் இரண்டு மடங்காக உயர்த்தப்படுகிறது.
புதுடெல்லி,
ஒலிம்பிக், ஆசிய போட்டி உள்ளிட்ட மிகப்பெரிய போட்டிகளில் பதக்கம் வென்றவர்களின் ஓய்வூதியம் இரண்டு மடங்காக உயர்த்தப்படுகிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இனி அது ரூ.20 ஆயிரமாக கொடுக்கப்படும். உலக கோப்பை மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் கைப்பற்றிய இந்தியர்களின் ஓய்வூதியம் ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.16 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது. காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய போட்டியில் தங்கம் பெற்றவர்களின் ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயருகிறது. இதே போல் பாராஒலிம்பிக்கில் சாதித்தவர்களின் ஓய்வூதியமும் இரட்டிப்பாகிறது.
மேற்கண்ட தகவலை மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோர் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.