நீச்சல் வீராங்கனைகளை வீடியோ எடுத்த இந்திய பாரா நீச்சல் வீரர் பிரசாந்த கர்மாகருக்கு 3 ஆண்டுகள் தடை


நீச்சல் வீராங்கனைகளை வீடியோ எடுத்த இந்திய பாரா நீச்சல் வீரர் பிரசாந்த கர்மாகருக்கு 3 ஆண்டுகள் தடை
x
தினத்தந்தி 1 March 2018 9:15 PM GMT (Updated: 1 March 2018 9:11 PM GMT)

நீச்சல் வீராங்கனைகளை வீடியோ படம் எடுத்த பிரச்சினையில் சிக்கிய இந்திய பாரா நீச்சல் வீரர் பிரசாந்த கர்மாகருக்கு 3 ஆண்டுகள் தடை விதித்து இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி,

நீச்சல் வீராங்கனைகளை வீடியோ படம் எடுத்த பிரச்சினையில் சிக்கிய இந்திய பாரா நீச்சல் வீரர் பிரசாந்த கர்மாகருக்கு 3 ஆண்டுகள் தடை விதித்து இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை எடுத்துள்ளது.

பாரா நீச்சல் வீரர்


விபத்தில் வலது கை பாதிக்கப்பட்ட கொல்கத்தாவை சேர்ந்த பாரா (மாற்றுத் திறனாளி) நீச்சல் வீரர் பிரசாந்த கர்மாகர் உலக நீச்சல் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 16 முறை தேசிய பாரா நீச்சல் போட்டியில் தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்திய பிரசாந்த கர்மாகர் ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளிலும் பல்வேறு பதக்கங்கள் வென்று இருக்கிறார்.

2016-ம் ஆண்டில் ரியோவில் (பிரேசில்) நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய நீச்சல் அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட பிரசாந்த கர்மாகர் அர்ஜூனா விருது (2011-ம் ஆண்டு), தயான்சந்த் விருது (2015) உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர். தனது அற்புதமான செயல்பட்டால் நீச்சல் களத்தில் பலரையும் வியக்க வைத்த பிரசாந்த கர்மாகர் தற்போது வித்தியாசமான சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

வீராங்கனைகளை வீடியோ எடுத்த புகார்


கடந்த ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த தேசிய பாரா நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைகள் நீச்சலில் ஈடுபட்ட போது பிரசாந்த கர்மாகர் தனக்கு வேண்டிய ஒருநபர் மூலம் வீடியோ எடுத்துள்ளார். ஆனால் அதற்கு அந்த வீராங்கனைகளின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் இது குறித்து இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டியிடம் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து வீடியோ எடுத்த நபரை தடுத்த இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டியினர் அவரை வெளியேற்றினார்கள்.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரசாந்த கர்மாகர் இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி சேர்மன் டாக்டர் டேபாஸ் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் வீராங்கனைகள் நீச்சலில் ஈடுபட்டதை வீடியோவில் பதிவு செய்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதுடன் வீராங்கனைகளின் பெற்றோர் பலர் போலீசிலும் புகார் தெரிவித்தனர். போலீசார் பிரசாந்த கர்மாகரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தான் பதிவு செய்த வீடியோ காட்சிகளை அழித்து விடுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டார்.

3 ஆண்டுகள் தடை


இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்க குழு, 37 வயதான பிரசாந்த கர்மாகர் 3 ஆண்டுகள் பாரா ஒலிம்பிக் போட்டி தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

Next Story