ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன்: சிந்து வெற்றி; சாய்னா தோல்வி


ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன்: சிந்து வெற்றி; சாய்னா தோல்வி
x
தினத்தந்தி 14 March 2018 9:30 PM GMT (Updated: 14 March 2018 9:22 PM GMT)

நூற்றாண்டு கால பழமையும், கவுரவமும் மிக்க ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நேற்று தொடங்கியது.

பர்மிங்காம்,

நூற்றாண்டு கால பழமையும், கவுரவமும் மிக்க ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திரம் சாய்னா நேவால், ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங்குடன் (சீனத்தைபே) மல்லுகட்டினார். தற்சமயம் பேட்மிண்டன் களத்தில் சூறாவளியாய் சுழன்றடிக்கும் தாய் ஜூ யிங்கிடம் எதிர்பார்த்தது போலவே சாய்னா 14-21, 18-21 என்ற நேர் செட்டில் சரண் அடைந்தார். வெறும் 38 நிமிடங்களில் சாய்னாவின் சவால் முடிவுக்கு வந்தது. தாய் ஜூ யிங்குக்கு எதிராக கடைசியாக விளையாடிய 8 ஆட்டங்களிலும் சாய்னா தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து 20-22, 21-17, 21-9 என்ற செட் கணக்கில் போர்ன்பவீ சோச்சுவோங்கை (தாய்லாந்து) சாய்த்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதலாவது சுற்றில் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 7-21, 21-14, 22-20 என்ற செட் கணக்கில் பிரைஸ் லெவர்ட்சை (பிரான்ஸ்) வெளியேற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை ருசிக்க ஸ்ரீகாந்துக்கு 58 நிமிடங்கள் தேவைப்பட்டது. அதே நேரத்தில் இன்னொரு இந்திய வீரர் சாய் பிரனீத் 21-13, 15-21, 11-21 என்ற செட் கணக்கில் சன் வான் ஹோவிடம் (தென்கொரியா) போராடி வீழ்ந்தார்.

Next Story