துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 25 May 2018 8:46 PM GMT (Updated: 25 May 2018 8:46 PM GMT)

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் தனஞ்ஜெயா டி சில்வா. இவரது தந்தை ரஞ்சன் டி சில்வா நேற்று முன்தினம் இரவு மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கிரிக்கெட் வீரர்கள் களத்தில் ஸ்மார்ட் வாட்ச் அணிவதற்கு தடை

கிரிக்கெட் களத்தில் வீரர்கள் அதிநவீன கைக்கெடிகாரம் (ஸ்மார்ட் வாட்ச்) அணிவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தடை விதித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டின் போது பாகிஸ்தான் வீரர்கள் சிலர் இத்தகைய வாட்ச்களை அணிந்திருந்தனர். ஸ்மார்ட் வாட்ச்கள், ஸ்மார்ட் செல்போன்கள் போலவே செயல்படுவதால் அதில் இருந்து தகவல்களை அனுப்ப முடியும். இதன் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட வாய்ப்பு இருப்பதால், ஸ்மார்ட் வாட்ச்கள் அணிவதை தவிர்க்கும்படி பாகிஸ்தான் வீரர்களை ஐ.சி.சி. எச்சரித்துள்ளது.

கனடா போட்டியில் பங்கேற்கிறார், ஸ்டீவன் சுமித்

கனடா குளோபல் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இறுதியில் கனடாவில் தொடங்குகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் விளையாட உள்ளார். பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஸ்டீன் சுமித்துக்கு, சர்வதேச மற்றும் முதல்தர போட்டிகளில் விளையாட அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்தது. இருப்பினும் கிளப் போட்டிகளில் ஆட அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஸ்டீவன் சுமித்துடன், கிறிஸ் கெய்ல், மலிங்கா, ரஸ்செல், கிறிஸ் லின், டேவிட் மில்லர், சுனில் நரின், அப்ரிடி, பிராவோ உள்ளிட்டோரும் களம் இறங்குகிறார்கள். மொத்தம் 6 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒரே நேரத்தில் இரண்டு காதலியையும் மணக்கிறாரா ரொனால்டினோ?

பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ரொனால்டினோ. 2002–ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிரேசில் அணியில் இடம் பிடித்தவரான ரொனால்டினோ உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதையும் பெற்று இருக்கிறார். 38 வயதான இவருக்கு பிரிசில்லா கோயல்ஹோ, பிட்ரிஸ் சோவ்சா ஆகிய இரண்டு காதலிகள் இருக்கிறார்கள். இவர்களுடன் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்ட ரொனால்டினோ தற்போது அவர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார். இந்த நிலையில் ஆகஸ்டு மாதம் ஒரே நேரத்தில் இருவரையும் திருமணம் செய்ய அவர் திட்டமிட்டு இருப்பதாக அங்குள்ள பத்திரிகைகள் பரபரப்பான செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால் இந்த தகவலை மறுத்த ரொனால்டினோ, இது மிகப்பெரிய பொய் என்று கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்ஜெயாவின் தந்தை சுட்டுக்கொலை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் தனஞ்ஜெயா டி சில்வா. இவரது தந்தை ரஞ்சன் டி சில்வா நேற்று முன்தினம் இரவு மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கொழும்பின் புறநகரான ரத்மலானாவில் இந்த சம்பவம் நடந்தது. உள்ளூர் அரசியல்வாதியான ரஞ்சன் எதற்காக கொல்லப்பட்டார் என்பது தெரியவில்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து 26 வயதான தனஞ்ஜெயா டி சில்வா விலகியுள்ளார். மற்ற வீரர்கள் நேற்று வெஸ்ட் இண்டீசுக்கு புறப்பட்டனர்.


Next Story