‘என்னை இடைநீக்கம் செய்ததை எதிர்த்து அப்பீல் செய்வேன்’- பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு அறிவிப்பு


‘என்னை இடைநீக்கம் செய்ததை எதிர்த்து அப்பீல் செய்வேன்’- பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Jun 2018 11:00 PM GMT (Updated: 1 Jun 2018 10:00 PM GMT)

என்னை இடைநீக்கம் செய்ததை எதிர்த்து அப்பீல் செய்வேன் என பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

‘நான் ஊக்க மருந்து எதுவும் பயன்படுத்தவில்லை. என்னை இடைநீக்கம் செய்ததை எதிர்த்து அப்பீல் செய்வேன்’ என்று இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான பளுதூக்குதலில் 53 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு தங்கப்பதக்கம் வென்றார். மணிப்பூரை சேர்ந்த சஞ்சிதா சானு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

இந்த நிலையில் சஞ்சிதா சானுவிடம் போட்டி இல்லாத நேரத்தில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப்பது தெரியவந்ததாகவும், இதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் நேற்று முன்தினம் தெரிவித்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த உலக பளுதூக்குதல் போட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் தான் சஞ்சிதா சானு தோல்வி அடைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘நான் அப்பாவி. எந்தவித தவறும் செய்யவில்லை. தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து எதுவும் நான் எடுத்து கொள்ளவில்லை. என்னை இடைநீக்கம் செய்ததை எதிர்த்து இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்தின் ஆதரவுடன் அப்பீல் செய்வேன்’ என்று தெரிவித்தார்.

இந்த சர்ச்சை குறித்து இந்திய பளுதூக்குதல் சம்மேளன பொதுச்செயலாளர் சக்தேவ் யாதவ் கருத்து தெரிவிக்கையில், ‘ஊக்க மருந்து சோதனையின் முடிவுகளை அறிவிக்க ஏன்? நீண்ட காலம் பிடிக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஊக்க மருந்து சோதனைக்கான மாதிரி எடுத்த பிறகு சஞ்சிதா சானு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த உலக சாம்பியன் ஷிப் போட்டியில் கலந்து கொண்டார். பின்னர் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். ஏன் இதுபோல் நடக்கிறது என்பதை எதிர்த்து போராடுவோம். சஞ்சிதா சானுவின் ‘பி’ மாதிரியை சோதனை செய்யும் படி கேட்டுக்கொள்வோம். அதன் முடிவு வந்த பிறகு முன்னணி வக்கீலின் உதவியுடன் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்தின் விசாரணையை எதிர்கொள்வோம். சஞ்சிதா சானு எந்தவித ஊக்க மருந்தும் எடுத்து இருக்கமாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் அப்பாவி என்பதை நிரூபிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.

சஞ்சிதா சானுவின் ‘பி’ மாதிரி சோதனையிலும் ஊக்க மருந்து பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 4 ஆண்டு காலம் வரை தடை விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. 24 வயதான சஞ்சிதா சானு சமீபத்தில் தான் அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சி திட்டத்தில் மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் சேர்க்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2008-ம் ஆண்டு முதல் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்தால் நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கிய 13-வது இந்தியர் சஞ்சிதா சானு ஆவார்.

Next Story