கபடி மாஸ்டர்ஸ் 2018: தென்கொரியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி


கபடி மாஸ்டர்ஸ் 2018: தென்கொரியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 29 Jun 2018 7:05 PM GMT (Updated: 29 Jun 2018 7:05 PM GMT)

கபடி மாஸ்டர்ஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் தென்கொரியாவுக்கு எதிராக 36-20 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்றது. #KabaddiMastersDubai2018

துபாய்,

துபாயில் கபடி மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜென்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றன.

இதில் லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. இதில் இன்று முதலாவதாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஈரான் அணி, பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.  அடுத்து இரண்டாவதாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியா, தென்கொரியா அணிகள் மோதின.

போட்டியின் துவக்கத்திலிருந்தே இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இந்திய அணி 17-10 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

அடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. இதில் இந்தியா 19 புள்ளிகளும், தென்கொரியா 10 புள்ளிகளும் எடுத்தது. இறுதியில் இந்தியா 36-20 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதன்மூலம் அடுத்து நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா - ஈரான் அணிகள் மோத உள்ளன.






Next Story