கொளுந்துவிட்டு எரியும் பந்துடன் கால்பந்து விளையாட்டு தெரியுமா


கொளுந்துவிட்டு எரியும் பந்துடன் கால்பந்து விளையாட்டு தெரியுமா
x
தினத்தந்தி 21 July 2018 8:45 AM GMT (Updated: 21 July 2018 8:45 AM GMT)

கொளுந்துவிட்டு எரியும் பந்துடன் விளையாடும் கால்பந்து போட்டி பற்றி உங்களுக்கு தெரியுமா?


கொளுந்துவிட்டு எரியும் பந்துடன் கால்பந்து விளையாட்டு. இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர்கள் தான் இந்த போட்டியை முதலில் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. தற்போது அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஏன் வட இந்தியாவிலும் ஒரு சில இடங்களில் இது விளையாடப்படுகிறது. 

 இந்தோனேசியாவில், பெரும்பாலும் காய்ந்த தேங்காய்களையே கால்பந்தாக பயன்படுத்தப்படுகின்றன. இதற்காகவே தேங்காயை பல நாட்கள் காய வைத்து எடை முற்றிலும் குறைந்த பின்னர் அதனை கால்பந்தாக பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களிலும் கால்பந்து விளையாட நினைத்த இந்தோனேசிய இளைஞர்கள், காய்ந்த தேங்காய்களில், பெட்ரோல் ஊற்றி எரித்து, விளையாட தொடங்கினர். 

இரவு நேரங்களில், குடும்பத்தினர் ரசிகர்களாக சூழ்ந்திருக்க, பொழுதுபோக்கு விளையாட்டாய் விளையாடப்படுகிறது இந்த  எரியும் கால்பந்து ( Flaming soccer). இதனை காண, வெளிநாட்டில் இருந்தும் மக்கள் செல்வதுண்டு. இந்த போட்டிக்கென பிரத்யேக விதிமுறைகள் கிடையாது. 

கால்பந்தாட்ட விதிமுறைகளே பின்பற்றப்படும். ஒரு சில மாற்றங்கள் மட்டுமே இருக்கும். குறிப்பாக கால்பந்தாட்ட மைதானத்தை விட சிறிய மைதானத்தில் எரியும் கால்பந்து (Flaming soccer) நடைபெறும். கைகளால் பந்தை தொடலாம். பவுல் வழங்கப்படமாட்டாது. ஏன் கைகளால் பந்தை எடுத்துகொண்டும் ஓடலாம். கால்பந்து போலவே அதிக கோல் அடிக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். 

அமெரிக்கா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில், நெருப்பு பற்றாத உடை, உடல் முழுக்க தீயில் இருந்து காக்கும் லோஷன்கள் என போதுமான பாதுகாப்பு அம்சங்களுடனே இந்த போட்டி நடக்கிறது. ஆனால், இந்தோனேசியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில், வீரர்கள் வெறும் கால்களுடனும், லுங்கி போன்ற பாதுகாப்பற்ற உடைகளுடனும் விளையாடி வருகின்றனர். இதனால், சில நேரங்களில், விபத்துகள் ஏற்படுவதும் உண்டு. 

எரியும் கால்பந்து (Flaming football)க்கு என்று பிரத்யேகமாக உலக போட்டிகள் வரும் ஆண்டுகளில் நடத்தப்படும் என அமெரிக்கா, இந்தோனேசியா உள்பட பல நாடுகள் கூறி வருகின்றன. அவ்வாறு உலக கோப்பை போட்டிகள் நடத்தப்படுமானால் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் மிகுந்த விளையாட்டாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.



Next Story