உலக பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர்கள் பிரனாய், சமீர் வர்மா வெற்றி


உலக பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர்கள் பிரனாய், சமீர் வர்மா வெற்றி
x
தினத்தந்தி 30 July 2018 10:45 PM GMT (Updated: 30 July 2018 9:01 PM GMT)

உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் பிரனாய், சமீர் வர்மா ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

நான்ஜிங், 

24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள நான்ஜின் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் பிரனாய், 109-ம் நிலை வீரர் அபினவ் மனோதாவை (நியூசிலாந்து) சந்தித்தார். 28 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் பிரனாய் 21-12, 21-11 என்ற நேர்செட்டில் அபினவ் மனோதாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 19-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சமீர் வர்மா 21-13, 21-10 என்ற நேர்செட்டில் 41-ம் நிலை வீரர் லுகாஸ் கார்வீயை (பிரான்ஸ்) சாய்த்து 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-அஸ்வினி பொன்னப்பா ஜோடி 21-9, 22-20 என்ற நேர்செட்டில் டென்மார்க் நாட்டை சேர்ந்த நிக்லாஸ் நோர்-சாரா இணையை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் மனு அட்ரி-சுமீத் ரெட்டி ஜோடி 21-13, 21-18 என்ற நேர்செட்டில் பல்கேரியாவின் டேனியல் நிகோலோவ்-இவான் ருசேவ் இணையை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் நேரடியாக 2-வது சுற்றில் விளையாடுகிறார்கள்.

Next Story