ஹெப்டத்லானில் தங்கம் வென்ற ஸ்வப்னாவுக்கு ரூ.10 லட்சம் பரிசு மற்றும் வேலை வாய்ப்பு


ஹெப்டத்லானில் தங்கம் வென்ற ஸ்வப்னாவுக்கு ரூ.10 லட்சம் பரிசு மற்றும் வேலை வாய்ப்பு
x
தினத்தந்தி 30 Aug 2018 9:15 PM GMT (Updated: 30 Aug 2018 7:10 PM GMT)

ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனையான மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.

கொல்கத்தா, 

ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனையான மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 100 மீட்டர் ஓட்டம் உள்பட 7 பந்தயங்கள் அடங்கிய ஹெப்டத்லானில் மகுடம் சூடிய முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையை படைத்த அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி, ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை மற்றும் அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். தாயகம் திரும்பியதும் அவருக்கு பாராட்டு விழா நடத்த அந்த மாநில தடகள சங்கம் முடிவு செய்துள்ளது.

ரிக்ஷா தொழிலாளியின் மகளான 21 வயதான ஸ்வப்னா அளித்த பேட்டியில், ‘எனக்கு இரண்டு கால்களிலும் தலா 6 விரல்கள் இருப்பதால் எந்த ஷூ அணிந்து விளையாடினாலும் வலி அதிகமாக இருக்கும். பயிற்சியின் போது பயன்படுத்தப்படும் ஷூவை அணிந்தாலும் வலிக்கத்தான் செய்கிறது. எனவே எனது கால்களுக்கு ஏற்ப பிரத்யேக ஷூவை ஏற்பாடு செய்து தருவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

கன்னத்தில் பேன்டேஜ் ஒட்டியிருந்தது ஏன் என்று கேட்ட போது, ‘நான் நிறைய சாக்லெட்டுகள் சாப்பிட்டதால் போட்டிக்கு முன்பாக கடுமையான பல் வலி ஏற்பட்டது. வலியை குறைப்பதற்காகத்தான் பேன்டேஜ் ஒட்டியிருந்தேன். வலி அதிகம் இருந்ததால் முதல் நாளில் களம் இறங்கி சாதிக்க முடியுமா? என்ற சந்தேகம் கூட ஏற்பட்டது. எப்படியோ ஒரு வழியாக சமாளித்து விட்டேன்’ என்றார்.


Next Story