பாரா ஆசிய விளையாட்டு: இந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை தமிழக வீரர் மாரியப்பனுக்கு வெண்கலம்


பாரா ஆசிய விளையாட்டு: இந்திய வீரர் ஷரத்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை தமிழக வீரர் மாரியப்பனுக்கு வெண்கலம்
x
தினத்தந்தி 11 Oct 2018 10:45 PM GMT (Updated: 11 Oct 2018 7:27 PM GMT)

3-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் நடந்து வருகிறது.

ஜகர்தா,

இதில் 6-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் ஷரத்குமார் 1.90 மீட்டர் உயரம் தாண்டி புதிய ஆசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். மற்றொரு இந்திய வீரர் வருண் சிங் பாத்தி 1.82 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான சேலத்தை சேர்ந்த மாரியப்பன் 1.67 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார். தங்கப்பதக்கம் வென்ற 26 வயதான ஷரத்குமார் பீகாரை சேர்ந்தவர் ஆவார். இளம் வயதிலேயே போலியோ நோயினால் கால் பாதிக்கப்பட்ட ஷரத்குமார் 2017-ம் ஆண்டு நடந்த பாரா உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுந்தர்சிங் குர்ஜார் 61.33 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இன்னொரு இந்திய வீரர் ரிங்கு 60.92 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கம் பெற்றார். பாரா ஒலிம்பிக்கில் 2 முறை தங்கப்பதக்கம் வென்றவரான இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த போட்டியில் இந்தியா இதுவரை 8 தங்கம், 17 வெள்ளி, 25 வெண்கலம் என்று மொத்தம் 50 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் உள்ளது. சீனா 137 தங்கம், 69 வெள்ளி, 49 வெண்கலம் என்று மொத்தம் 255 பதக்கங்கள் வென்று முதலிடத்தில் நீடிக்கிறது.

Next Story