துளிகள்
* தியோதர் கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
* இலங்கை–இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று (இரவு 7 மணி) நடக்கிறது. இதற்கிடையே இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ காயத்தால் அவதிப்பட்டு வருவதால் அதனை கருத்தில் கொண்டு கூடுதல் விக்கெட் கீப்பராக பென் போக்ஸ் அழைக்கப்பட்டு இருக்கிறார்.
* தியோதர் கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ரஹானே தலைமையிலான இந்திய ‘சி’ அணி, ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய ‘பி’ அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
* 5–வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் மலேசியா–பாகிஸ்தான் அணியும் (இரவு 8.25 மணி), 2–வது அரைஇறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா–ஜப்பான் (இரவு 10.40 மணி) அணியும் மோதுகின்றன. இந்திய அணி லீக் ஆட்டத்தில் 9–0 என்ற கோல் கணக்கில் ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜப்பானை எளிதில் வீழ்த்தி இருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி முன்பு தனியார் டெலிவிஷனில் அதிகாரியாக பணியாற்றிய போது தன்னுடன் வேலை பார்த்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியானது. இது குறித்து விளக்கம் அளிக்கும்படி ராகுல்ஜோரிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உத்தரவிட்டு இருந்தது. இதற்கிடையில் ராகுல் ஜோரியை தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று நிர்வாக கமிட்டி உறுப்பினரும், இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டனுமான டயானா எடுல்ஜி மற்றும் 7 மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர். இந்த நிலையில் ராகுல் ஜோரி மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த அலகாபாத் ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ராகேஷ் ஷர்மா தலமையில் 3 பேர் கொண்ட கமிட்டியை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி நியமித்துள்ளது. இந்த கமிட்டி தனது அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் ராகுல் ஜோரி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெறுவதாக அறிவித்த தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவில் மாற்றம் இல்லை என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.