புரோ கபடி: உ.பி. அணிக்கு தமிழ் தலைவாஸ் பதிலடி


புரோ கபடி: உ.பி. அணிக்கு தமிழ் தலைவாஸ் பதிலடி
x
தினத்தந்தி 2 Nov 2018 11:13 PM GMT (Updated: 2 Nov 2018 11:13 PM GMT)

புரோ கபடி போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, உ.பி. யோத்தாவை சாய்த்து முந்தைய தோல்விக்கு பழிதீர்த்தது.

நொய்டா,

6-வது புரோ கபடி லீக் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் ஏ, பி என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 3 முறை மோதுவதுடன், எதிர்பிரிவினரையும் சந்திக்க வேண்டும். ஆக ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் நொய்டாவில் நேற்றிரவு அரங்கேறிய 44-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, உ.பி.யோத்தாவுடன் (பி பிரிவு) மல்லுகட்டியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழ்தலைவாஸ் அணி முதல் பாதியில் 26-11 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பிற்பாதியிலும் அதே முன்னிலையை தக்க வைத்துக் கொண்ட தலைவாஸ் வீரர்கள், உள்ளூர் அணியை மிரள வைத்தனர்.

முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 46-24 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவை தோற்கடித்தது. தலைவாஸ் அணியில் சுகேஷ் ஹெக்தே, கேப்டன் அஜய் தாகூர் ரைடு மூலம் தலா 9 புள்ளிகள் வீதம் எடுத்து வெற்றியை சுலபமாக்கினர். டேக்கிள்சில் மன்ஜீத் சிலார் (8 புள்ளி) அருமையாக செயல்பட்டார். தலைவாஸ் அணி ஏற்கனவே சென்னையில் நடந்த தொடக்க லீக்கில் உ.பி.யோத்தாவிடம் 32-37 என்ற புள்ளி கணக்கில் தோற்று இருந்தது. அந்த தோல்விக்கு இப்போது அவர்களது ஊரிலேயே தலைவாஸ் வீரர்கள் பதிலடி கொடுத்து விட்டனர். 9-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 3-வது வெற்றியாகும். உ.பி.யோத்தா சந்தித்த 4-வது தோல்வியாகும்.

மற்றொரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 36-25 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது.

இன்றைய ஆட்டங்களில் யு மும்பா-புனேரி பால்டன் (இரவு 8 மணி), உ.பி.யோத்தா-பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story