உலக குத்துச்சண்டை: 3 இந்திய வீராங்கனைகள் வெற்றி


உலக குத்துச்சண்டை: 3 இந்திய வீராங்கனைகள் வெற்றி
x
தினத்தந்தி 17 Nov 2018 10:15 PM GMT (Updated: 17 Nov 2018 7:22 PM GMT)

உலக குத்துச்சண்டையில் 3 இந்திய வீராங்கனைகள் வெற்றிபெற்றனர்.

புதுடெல்லி,

10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 57 கிலோ பிரிவில் நேற்று நேரடியாக 2-வது சுற்றில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சோனியா லாத்தெர், மொராக்கோ வீராங்கனை டோஜானி டோயாவை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சோனியா லாத்தெர் 5-0 என்ற கணக்கில் டோஜானி டோயாவை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அரியானாவை சேர்ந்த 26 வயதான சோனியா லாத்தெர் 2016-ம் ஆண்டு உலக போட்டியில் வெள்ளிப்பதக்கமும், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 2 முறை வெள்ளிப்பதக்கமும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் 51 கிலோ பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி 4-1 என்ற கணக்கில் அர்மேனியா வீராங்கனை அனுஷ் கிரிகோர்யானை சாய்த்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். 64 கிலோ பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் 4-1 என்ற கணக்கில் அமெரிக்காவின் அமெலி மூரை தோற்கடித்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.


Next Story