து ளி க ள்


து ளி க ள்
x
தினத்தந்தி 19 Nov 2018 10:15 PM GMT (Updated: 19 Nov 2018 9:15 PM GMT)

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் 3-வது லீக் ஆட்டம் இன்று பல்வேறு இடங்களில் தொடங்குகிறது


* ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் 3-வது லீக் ஆட்டம் இன்று பல்வேறு இடங்களில் தொடங்குகிறது. ஒங்கோலில் இன்று தொடங்கும் லீக் ஆட்டத்தில் தமிழக அணி, ஆந்திராவை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக வீரர் ஆர்.அஸ்வின், டெல்லி வீரர் இஷாந்த் சர்மா ஆகியோர் ரஞ்சி போட்டியில் விளையாட வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ரஞ்சி போட்டியில் ஒரு இன்னிங்சில் 15 ஓவர்களுக்கு மேல் பந்து வீசக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

* உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. தொடக்க விழா 27-ந் தேதி நடைபெறுகிறது. தொடக்க விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தி நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். தொடக்க விழாவுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. தொடக்க விழாவுக்கான முதல் டிக்கெட்டை ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ரூ.500 கொடுத்து பெற்றுக்கொண்டார்.

* நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), பாபியா காருனா (அமெரிக்கா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. 12 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் நேற்று முன்தினம் நடந்த 7-வது சுற்று ஆட்டம் 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிராவில் முடிந்தது. 7-வது சுற்று முடிவில் இருவரும் தலா 3½ புள்ளிகள் பெற்றுள்ளனர்.

* 6-வது புரோ கபடி லீக் தொடரில் ஆமதாபாத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 72-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. அடுத்து நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-தபாங் டெல்லி (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன.


Next Story