சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா, காஷ்யப் வெற்றி


சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா, காஷ்யப் வெற்றி
x
தினத்தந்தி 21 Nov 2018 10:00 PM GMT (Updated: 21 Nov 2018 9:24 PM GMT)

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

லக்னோ, 

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21–10, 21–10 என்ற நேர்செட்டில் மொரிஷியஸ் வீராங்கனை காதே போ குனேவை தோற்கடித்து 2–வது சுற்றுக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் காஷ்யப் 21–14, 21–12 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் தனோன்சாக்கை தோற்கடித்து 2–வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21–12, 21–10 என்ற நேர்செட்டில் ரஷிய வீரர் செர்ஜி சிராந்தை தோற்கடித்தார். மற்ற ஆட்டங்களில் இந்திய வீரர் சமீர் வர்மா 21–12, 21–17 என்ற நேர்செட்டில் சக வீரர் சிரில் வர்மாவையும், இந்திய வீரர் குருசாய்தத் 21–11, 21–15 என்ற நேர்செட்டில் ஜெர்மனி வீரர் ஜோனதன் பெர்சனையும் சாய்த்தனர். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 21–13, 13–21, 9–21 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரர் ஹர்ஷீல் டானியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சவுரப் வர்மா 21–17, 15–21, 15–21 என்ற செட் கணக்கில் சீன வீரர் ஜோ ஸ்கியிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 14–21, 7–21 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் சிகோ அய்ராவிடம் வீழ்ந்தார்.


Next Story