து ளி க ள்


து ளி க ள்
x
தினத்தந்தி 25 Nov 2018 9:00 PM GMT (Updated: 25 Nov 2018 8:33 PM GMT)

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதியில் இந்திய மூத்த வீராங்கனை மிதாலிராஜ் நீக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

* பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் தொடக்க நாளில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்திருந்த பாகிஸ்தான் அணி 2-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்து 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் டெஸ்ட் ஒன்றில் முதல் இன்னிங்சில் ஒரு அணியின் குறைந்தபட்ச ‘டிக்ளேர்’ ஸ்கோர் இதுவாகும். ஹாரிஸ் சோகைல் (147 ரன்), பாபர் அசாம் (127 ரன், நாட்-அவுட்) சதம் அடித்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது.

* பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதியில் இந்திய மூத்த வீராங்கனை மிதாலிராஜ் நீக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதையடுத்து இந்த தொடரில் அவரது உடல்தகுதி குறித்து அணி நிர்வாகத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி விளக்கம் கேட்டுள்ளது. இதற்கிடையே, இந்த உலக கோப்பையில் இந்தியாவின் செயல்பாடு குறித்து தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பவார், அணியின் மேலாளர் திருப்தி பட்டாச்சார்யா ஆகியோர் கிரிக்கெட் வாரியத்திடம் இன்று தங்களது அறிக்கையை அளிக்க உள்ளனர்.

* பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டின் முக்கியமான ஆட்டத்தில் மிதாலிராஜ் கழற்றி விடப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ‘மிதாலி நீக்கப்பட்டதில் எனக்கு ஆச்சரியமில்லை. நானும் இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்கு வந்த பிறகு வெளியே உட்கார வைக்கப்பட்டேன். இத்தனைக்கும் ஒரு நாள் போட்டியில் நான் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த காலக்கட்டம் அது. வாழ்க்கையில் இது நடப்பது தான்’ என்று கூறியுள்ளார்.

* 6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு புனேயில் நடந்த 81-வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 34-27 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தி 5-வது வெற்றியை பெற்றது. இன்றைய ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8 மணி), பெங்களூரு புல்ஸ்-உ.பி. யோத்தா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

* நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), பாபியானோ காருனா (அமெரிக்கா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த 11-வது சுற்று ஆட்டம் 55-வது காய் நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இதுவரை நடந்த அனைத்து ஆட்டங்களும் டிரா ஆன நிலையில் 12-வது மற்றும் கடைசி சுற்று போட்டி இன்று நடக்கிறது.

* ஒடிசாவில் நாளை மறுதினம் தொடங்கும் உலக கோப்பை ஆக்கி போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி நேற்று இந்தியா வந்து சேர்ந்தது.

* பிரான்சின் லில்லி நகரில் நடந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் குரோஷியா 3-1 என்ற கணக்கில் நடப்பு சாம்பியன் பிரான்சை சாய்த்து 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.


Next Story