துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 6 Dec 2018 9:00 PM GMT (Updated: 6 Dec 2018 8:17 PM GMT)

12–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 18–ந் தேதி ஜெய்ப்பூரில் நடக்கிறது.

* பிரேசில் கால்பந்து ஜாம்பவானான 78 வயது பீலே அளித்த ஒரு பேட்டியில், ‘என்னை பொறுத்த மட்டில் எப்பொழுதும் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் மரடோனா. அர்ஜென்டினா வீரர் மெஸ்சியை விட மரடோனா சிறந்த வீரரா? என்று என்னிடம் கேட்டால் ஆம் என்று தான் சொல்வேன். பிரான்சின் ஆன்டோன் பெக்கன்பார், நெதர்லாந்தை சேர்ந்த ஜோஹன் கிராப் ஆகியோரும் மரடோனாவை போல் சிறந்த வீரர்கள்’ என்றார்.

* 12–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 18–ந் தேதி ஜெய்ப்பூரில் நடக்கிறது. ஐ.பி.எல். போட்டி முடிந்த உடன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இருப்பதால் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று தெரிகிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட யுவராஜ்சிங்கும் வீரர்கள் ஏலப்பட்டியலில் உள்ளார். கடந்த ஆண்டு அவரது அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அது தற்போது ரூ.1 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு ரூ.11½ கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டு சோபிக்காததால் நீக்கம் செய்யப்பட்ட ஜெய்தேவ் உனட்கட்டின் அடிப்படை விலை ரூ.1½ கோடியாக குறைந்து இருக்கிறது.

* கடந்த 2015–ம் ஆண்டில் தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் களம் இறங்கிய இந்தியாவை சேர்ந்த விஜேந்தர் சிங் தொடர்ச்சியாக தனது 10 பந்தயங்களிலும் வெற்றி வாகை சூடி அசத்தினார். தற்போது விஜேந்தர் சிங் அமெரிக்க தொழில்முறை குத்துச்சண்டை கிளப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதன்படி அவர் தனது முதல் பந்தயத்தில் மெக்சிகோவை சேர்ந்த கேனிலோ ஆல்வாரெஸ்சுடன் மோதுகிறார். இந்த போட்டி நியூயார்க்கில் உள்ள மேடிசன் சதுக்க கார்டனில் அரங்கேறுகிறது. இந்த போட்டியை அடுத்த ஆண்டு (2019) பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் போட்டிக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

* 31–வது தென் மண்டல நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வருகிற 27–ந் தேதி முதல் 29–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக அணி தேர்வு செய்வதற்கான மாநில நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 9–ந் தேதி வரை நடக்கிறது. இதில் 745 வீரர்–வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.


Next Story