புரோ கைப்பந்து லீக் வீரர்கள் ஏலம்: நவீன்ராஜா ஜேக்கப்பை ரூ.7 லட்சத்துக்கு சென்னை அணி வாங்கியது


புரோ கைப்பந்து லீக் வீரர்கள் ஏலம்: நவீன்ராஜா ஜேக்கப்பை ரூ.7 லட்சத்துக்கு சென்னை அணி வாங்கியது
x
தினத்தந்தி 14 Dec 2018 10:45 PM GMT (Updated: 14 Dec 2018 8:03 PM GMT)

புரோ கைப்பந்து லீக் வீரர்கள் ஏலத்தில் நவீன்ராஜா ஜேக்கப்பை ரூ.7 லட்சத்துக்கு சென்னை அணி வாங்கியது.

புதுடெல்லி,

இந்திய கைப்பந்து சம்மேளனம் சார்பில் முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி அடுத்த ஆண்டு (2019) பிப்ரவரி மாதம் 2-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை சென்னை மற்றும் கொச்சியில் நடக்கிறது. இதில் 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான சென்னை ஸ்பார்டன்ஸ் 11 வீரர்களை வாங்கி இருக்கிறது. வெளிநாட்டு வீரராக கனடாவின் ரூடி வெராப், நட்சத்திர வீரராக அகின் (இந்தியா) ஆகியோரை சென்னை அணி வாங்கி உள்ளது. தமிழகத்தை சேர்ந்த நவீன் ராஜா ஜேக்கப்பை ரூ.7 லட்சத்துக்கு சென்னை அணி எடுத்து இருக்கிறது. பிரபாகரன் (ரூ. 5 லட்சத்துக்கு 20 ஆயிரம்), கேரளாவை சேர்ந்த விபின் ஜார்ஜ் (ரூ.4 லட்சத்துக்கு 80 ஆயிரம்), பிறைசூடன், அஸ்வின், பாக்யராஜ், ஷெல்டன் மோசஸ், கபில்தேவ், ஹரிகரன் ஆகியோரையும் சென்னை அணி தன்வசப்படுத்தி இருக்கிறது. சென்னை ஸ்பார்டன்ஸ் அணி சிறந்த வீரர்களை வாங்கி இருப்பதாக அந்த அணியின் மானேஜர் ஜெ.நடராஜன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Next Story