துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 17 Dec 2018 10:08 PM GMT (Updated: 17 Dec 2018 10:08 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மொகாலியில் நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு-பஞ்சாப் அணிகள் மோதின.

* ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மொகாலியில் நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு-பஞ்சாப் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் முறையே தமிழக அணி 215 ரன்னும், பஞ்சாப் அணி 479 ரன்னும் எடுத்தன. பின்னர் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து இருந்தது. 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய தமிழக அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 6 விக்கெட்டுக்கு 383 ரன்கள் எடுத்தது. இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற பஞ்சாப் அணி 3 புள்ளியும், தமிழக அணி ஒரு புள்ளியும் பெற்றன.

* புரோ கபடி லீக் தொடரில் அரியானாவில் உள்ள பஞ்ச்குலா நகரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 117-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சைமண்ட்ஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நானும், ஹர்பஜன்சிங்கும் இணைந்து ஆடிய போது ஒரு நிகழ்ச்சியில் தன்னை அழைத்து பேசுகையில், 2008-ம் ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியின் போது நடந்த சம்பவத்துக்காக (குரங்கு என்று திட்டிய விவகாரம்) வருத்தம் தெரிவித்து கண்ணீர் விட்டார்’ என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ‘நான் ஒரு போதும் சைமண்ட்ஸ்சிடம் மன்னிப்பு கேட்கவில்லை. அவர் ஒரு கற்பனை கதை எழுத்தாளர் போல் செயல்படுகிறார்’ என்று ஹர்பஜன்சிங் டுவிட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார்.


Next Story