ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம் சிந்து, சாய்னா சாதிப்பார்களா?


ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம் சிந்து, சாய்னா சாதிப்பார்களா?
x
தினத்தந்தி 5 March 2019 10:30 PM GMT (Updated: 5 March 2019 10:46 PM GMT)

ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய நட்சத்திரங்கள் சிந்து, சாய்னா சாதிப்பார்களா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

பர்மிங்காம்,

ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய நட்சத்திரங்கள் சிந்து, சாய்னா சாதிப்பார்களா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

பேட்மிண்டன் போட்டி

மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான ஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் இன்று (புதன்கிழமை) முதல் 10–ந்தேதி வரை நடக்கிறது. தரவரிசையில் டாப்-32 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டியில் இந்தியர்களுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது.

ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் தென்கொரிய மங்கை சங் ஜி ஹயூனை எதிர்கொள்கிறார். சங் ஜி ஹயூன், கடந்த ஆண்டு ஹாங்காங் ஓபனில் சிந்துவை வீழ்த்தியவர் ஆவார். முதல் இரண்டு சுற்றுகளில் சிந்து வெற்றி பெற்றால், கால்இறுதியில் பலம் வாய்ந்த 4-ம் நிலை வீராங்கனையான சென் யூபெயுடன் (சீனா) மோத வேண்டி இருக்கும். 22 வயதான சிந்து கூறுகையில், ‘ஒவ்வொரு சுற்றும் சவாலானது. என்னை பொறுத்தவரை ஒவ்வொரு புள்ளியும் முக்கியமானது. தற்போது முதல் சுற்றில் கவனம் செலுத்தி வருகிறேன்’ என்றார்.

சாய்னா, ஸ்ரீகாந்த்

ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டனில் 2015-ம் ஆண்டில் 2-வது இடம் பிடித்தவரான இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோருடன் மோதுகிறார். சாய்னா முதல் இரண்டு தடையை கடக்கும் பட்சத்தில், கால்இறுதியில் நடப்பு சாம்பியனும் உலக தரவரிசையில் முதலிடம் வகிப்பவருமான தாய் ஜூ யிங்கை (சீனதைபே) எதிர்கொள்ள நேரிடும். தாய் ஜூ யிங்குடன் கடைசியாக மோதிய 12 ஆட்டங்களில் சாய்னா தொடர்ச்சியாக தோல்வி கண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், 8–ம் நிலை வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த், முதல் ரவுண்டில் பிரைஸ் லெவர்டெசை (பிரான்ஸ்) சந்திக்கிறார். அனேகமாக அவர் கால்இறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் கென்டோ மோமோட்டாவுடன் (ஜப்பான்) மல்லுக்கட்ட வேண்டியது இருக்கும். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பிரனாய், சாய் பிரனீத் நேருக்கு நேர் சந்திக்க இருக்கிறார்கள். சமீர் வர்மா தனது சவாலை முன்னாள் முதல் நிலை வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் (டென்மார்க்) தொடங்குகிறார்.

பெண்கள் இரட்டையரில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி, மேக்னா ஜக்கம்புடி–பூர்விஷா ராம், ஆண்கள் இரட்டையரில் மனு அட்ரி–சுமித் ரெட்டி ஆகிய இந்திய ஜோடியினர் களம் இறங்குகிறார்கள். இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு ரூ.49 லட்சமும், இரட்டையர் பிரிவில் சாம்பியன் ஆகும் ஜோடிக்கு ரூ.52 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

18 ஆண்டு கால ஏக்கம்

நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த கவுரவமிக்க இந்த போட்டியில் பிரகாஷ் படுகோனே (1980–ம் ஆண்டு), கோபிசந்த் (2001–ம் ஆண்டு) ஆகியோர் தவிர வேறு எந்த இந்தியரும் மகுடம் சூடியதில்லை. 18 ஆண்டு கால ஏக்கத்தை இந்த முறை இந்தியர்கள் தணிப்பார்கள் என்று நம்புவதாக தலைமை பயிற்சியாளர் கோபிசந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ‘சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். இந்த சீசனில் அவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவா£ர்கள் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று கோபிசந்த் குறிப்பிட்டார்.

முதல் நாள் ஆட்டங்கள் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story