துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 11 March 2019 10:15 PM GMT (Updated: 11 March 2019 9:54 PM GMT)

சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் சூப்பர் லீக் ஆட்டம் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் நடந்து வருகிறது.


* 3 முறை (2016, 2017, 2018) உலக சாம்பியன் பட்டத்தை வென்ற அமெரிக்க சைக்கிள் அணியில் இடம் பிடித்தவரும், 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற அமெரிக்க அணியில் அங்கம் வகித்தவருமான 23 வயதான சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கான காரணம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. காதல் பிரச்சினையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. கெல்லி கேட்லின் மறைவுக்கு அமெரிக்க சைக்கிள் பந்தய உலகினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

* சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் சூப்பர் லீக் ஆட்டம் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் ஆடிய விதர்பா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரெயில்வே அணிக்கு எதிரான மற்றொரு ஆட்டத்தில் 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் அணி 14.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்னொரு ஆட்டத்தில் மராட்டிய அணி 14 ரன் வித்தியாசத்தில் ஜார்கண்ட் அணியை வீழ்த்தியது.

* கடந்த 6 மாதமாக சதம் அடிக்காத இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த 4-வது ஒரு நாள் போட்டியில் 143 ரன்கள் எடுத்து தன் மீதான விமர்சனத்துக்கு விடை அளித்தார். போட்டிக்கு பிறகு ஷிகர் தவான் அளித்த பேட்டியில், ‘விமர்சனத்தை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள். முதலில் நான் பத்திரிகைகள் படிப்பதில்லை. எனக்கு தேவையில்லாத விஷயங்களை எடுத்து கொள்ளமாட்டேன். என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது. எனது சொந்த உலகில் நான் வாழ்கிறேன். எனது எண்ணங்கள் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை நான் முடிவு செய்கிறேன். அமைதியான நிலையில் இருக்கும் போது நான் நன்றாக விளையாடுவேன். மன வேதனை அடையும் போது அதில் இருந்து வேகமாக விடுபட்டு விடுவேன். என்னை பற்றி என்ன எழுதுகிறார்கள் என்பது எனக்கு தெரியாது. நல்ல மனநிலையில் இருந்து எனது செயல்களை செய்ய வேண்டும் என்று விரும்புவேன். ரிஷாப் பான்டை, டோனியுடன் ஒப்பிடக்கூடாது. ஆஷ்டன் டர்னரை ஸ்டம்பிங் செய்து ஆட்டம் இழக்க வைத்து இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கலாம். பனியின் தாக்கம் காரணமாக பந்து கையை விட்டு நழுவியது. எனவே கேட்ச் செய்வது கடினமாக இருந்தது’ என்று தெரிவித்தார்.

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் அளித்த ஒரு பேட்டியில், ‘லெக் ஸ்பின்னர்கள் வெவ்வேறு விதமாக பந்து வீசுவார்கள். குல்தீப் யாதவ் பந்தை சுழல வைப்பதுடன் வார்னேவின் பந்து வீச்சு போல் பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள கடினமான வகையில் வீசுகிறார். யுஸ்வேந்திர சாஹல் ஸ்டம்பை குறி வைத்து பந்து வீசக்கூடியவர். சாஹல் பந்து வீச்சை விட குல்தீப் யாதவ் பந்து வீச்சை எதிர்கொள்வது கடினமானதாகும். பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் கேதர் ஜாதவ் பந்து வீச்சு வித்தியாசமாக இருக்கிறது. அவரது பந்து வீச்சை ஆஸ்திரேலிய அணியினர் எதிர்கொள்ளும் விதம் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.



Next Story